எதிர்வரும் வெசாக் பௌர்ணமி பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் நடத்துவதற்காக இதுவரையில் 2,388 தன்சல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் (PHIU) தெரிவித்துள்ளது.
மே மாதம் 29ஆம் திகதி வரை இந்த தன்சல்களைப் பதிவு செய்யும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்று அச்சங்கத்தின் செயலாளர் சாமில் முத்துக்குட தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் சாமில் முத்துக்குட விடுத்துள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,
“வெசாக் பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் தன்சல்களைப் பதிவு செய்யும் பணிகளை இந்த மாத தொடக்கத்தில் இருந்தே நாங்கள் ஆரம்பித்துவிட்டோம். இதற்கமைய, நாடு முழுவதும் உள்ள சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) அலுவலக மட்டத்தில் இந்தத் தன்சல்கள் பதிவு செய்யப்படத் தொடங்கியுள்ளன. நேற்று மாலை நிலவரப்படி நாடு முழுவதும் சுமார் 2,388 தன்சல்கள் பதிவாகியிருந்தன.
சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக மட்டத்தில் இந்த தன்சல்களைப் பதிவு செய்யும் பணிகளைப் போன்றே, உணவுகளை எவ்வாறு சுகாதாரமான முறையில் பொதுமக்களுக்கு வழங்குவது என்பது குறித்து ஏற்பாட்டாளர்களுக்கு விழிப்புணர்வூட்டும் திட்டங்களும் நடத்தப்படும்.”
தன்சல் ஒன்றை நடத்த உத்தேசித்துள்ளவர்கள், இறுதி நேரம் வரை காத்திராமல் எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் அதனைப் பதிவு செய்துகொள்ளுமாறு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
“விழிப்புணர்வுப் பணிகளை எளிதாக்குவதற்காக, நீங்கள் தன்சல் வழங்கத் திட்டமிட்டிருந்தால், உடனடியாக சம்பந்தப்பட்ட சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகத்தின் பொது சுகாதார பரிசோதகரைச் (PHI) சந்தித்து பதிவு செய்துகொள்ளுமாறு நாங்கள் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்” என சாமில் முத்துக்குட மேலும் தெரிவித்துள்ளார்.
