இலங்கை தேர்தல் சட்ட மறுசீரமைப்பு தொடர்பாக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழு பொதுமக்களிடமிருந்து ஆலோசனைகளைக் கோரியுள்ள நிலையில், அதுகுறித்த விசேட செயலமர்வொன்று சாய்ந்தமருது பாவா ரோயலி மண்டபத்தில் நடைபெற்றது.
சமூக அரசியல் வலுவூட்டல் மையத்தினால் (CCPE) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த முழுநாள் செயலமர்வில், ஜனாதிபதித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் உள்ளூராட்சிமன்றத் தேர்தல்கள் தொடர்பான சட்ட மறுசீரமைப்புகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. காலத்திற்குப் பொருத்தமான இந்த நிகழ்வில் கிழக்கிலங்கையின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
இலங்கை நாடாளுமன்றத்தின் சிரேஷ்ட ஆய்வாளர் எம். அஜ்வடீன் மற்றும் முன்னாள் பிரதித் தேர்தல் ஆணையாளர் எம். எம். முஹம்மத் ஆகியோர் வளவாளர்களாகக் கலந்துகொண்டு ஆலோசனைகளையும், வழிகாட்டல்களையும் வழங்கினர்.
அனுபவம் வாய்ந்த சிவில் சமூக மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்கள், இலங்கை நிர்வாக சேவை (SLAS) அதிகாரிகள், சட்டத்தரணிகள் உள்ளிட்ட சுமார் 30 பேர் இதில் பங்கேற்றுத் தங்களது பெறுமதியான கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டனர். குறிப்பாகத் திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களிலிருந்து சிவில் சமூகப் பிரதிநிதிகள் பலரும் இதில் கலந்துகொண்டதுடன், நாட்டின் பன்மைத்துவச் சூழமைவுகளைக் கருத்தில் கொண்டு பல்வேறு ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டன.
இங்கு நடைபெற்ற குழு விவாதங்களின் அடிப்படையில் தொகுக்கப்படும் இறுதி ஆவண அறிக்கை, நாடாளுமன்றத் தெரிவுக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ள இறுதித் திகதியான ஜூலை 15 ஆம் தேதிக்கு முன்னர் முறைப்படி சமர்ப்பிக்கப்படவுள்ளது.
தேர்தல் முறைமையில் அவசியமான மாற்றங்களை உருவாக்குவதற்கு அடித்தளமாக அமைந்த இந்தச் செயலமர்வு, பங்கேற்பாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

