முன்னணி இஸ்லாமிய அறிஞரும், எழுத்தாளரும், கல்வியாளருமான மௌலானா சையத் சல்மான் ஹுசைனி நத்வி (வயது 72) லக்னோவில் காலமானார்.
இவரது மறைவுக்கு இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் உள்ள அறிஞர்கள், மத நிறுவனங்கள் மற்றும் மாணவர்கள் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
1954 ஆம் ஆண்டு புகழ்பெற்ற இஸ்லாமிய அறிஞர்களின் குடும்பத்தில் பிறந்த நத்வி, தனது கல்வியை ‘தாருல் உலூம் நத்வத்துல் உலமா’ நிறுவனத்தில் பயின்றார்.
பின்னர் அங்கேயே பல தசாப்தங்களாக ஆசிரியராகவும், ‘தவா மற்றும் ஷரியா’ (Dawah and Shariah) பீடத்தின் தலைவராகவும் பணியாற்றினார். இஸ்லாமிய இறையியல், சட்டவியல், ஹதீஸ் மற்றும் சீறா (நபிகளாரின் வரலாறு) ஆகியவற்றில் அவரது சிறந்த புலமைக்காக அவர் பரவலாக மதிக்கப்பட்டார்.
சிறந்த எழுத்தாளரான நத்வி, இஸ்லாமிய வரலாறு, சமகால சவால்கள் மற்றும் முஸ்லிம் சமூகங்கள் குறித்து அரபு மற்றும் உருது மொழிகளில் ஏராளமான புத்தகங்களையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.
மேலும், கல்வி நிறுவனங்களை நிறுவுவதில் முக்கிய பங்காற்றிய அவர், ‘ஜமியாத் ஷபாப் உல் இஸ்லாம்’ அமைப்பின் தலைவராகவும், ‘டாக்டர் அப்துல் அலி யுனானி மருத்துவக் கல்லூரியின் தலைவராகவும் பணியாற்றினார்.
அவரது மறைவுக்கு மதத் தலைவர்கள், அமைப்புகள் மற்றும் அவரது முன்னாள் மாணவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ஒரு செல்வாக்குமிக்க ஆசிரியர், சிறந்த அறிஞர் மற்றும் சொற்பொழிவாளர் எனப் போற்றப்படும் அவரது பங்களிப்பு, இஸ்லாமிய கல்வியில் என்றும் நீங்காத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அவர்கள் நினைவு கூர்ந்தனர்.
லக்னோவில் நடைபெற்ற அவரது இறுதிச் சடங்கு பிரார்த்தனையில் (ஜனாஸா தொழுகை) ஏராளமான பொதுமக்கள், இஸ்லாமிய அறிஞர்கள் மற்றும் அவரது அபிமானிகள் கலந்து கொண்டனர்.
