அண்மைக் காலமாகப் பெரும் சர்ச்சைக்குரிய விடயமாகப் பேசப்பட்டு வரும் ஹஜ் யாத்திரை மற்றும் முஸ்லிம் சமூகம் சார்ந்த முக்கிய பிரச்சினைகள் குறித்துக் கலந்துரையாடுவதற்காக, முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குச் சந்திப்பு நேரம் ஒதுக்கித் தருமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாகப் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவிக்கு அவர் அவசரக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
“வரவிருக்கும் நாடாளுமன்ற அமர்வுக் காலத்தில், ஹஜ் யாத்திரை மற்றும் முஸ்லிம் சமூகத்தைப் பிரதிபலிக்கும் சில முக்கிய விடயங்கள் குறித்து உங்களுடன் சந்தித்து கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பமொன்றை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இந்தக் கலந்துரையாடலில் பல்வேறு அரசியல் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்க வேண்டும் என விரும்புகிறோம். இதன் மூலம் ஹஜ் யாத்திரையின் நிர்வாகம், ஏற்பாடுகள் மற்றும் யாத்திரிகர்கள் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பாக விரிவானதும் பயனுள்ளதுமான கலந்துரையாடலை முன்னெடுக்க முடியும் என நம்புகின்றேன்.
மேலும், முஸ்லிம் சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர், ஹஜ் குழுவின் பிரதிநிதிகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஏனைய அதிகாரிகள் இச்சந்திப்பில் பங்கேற்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். அவர்களின் பங்களிப்பு மூலம் தற்போதைய பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை அடையாளம் காணவும், எதிர்காலத்தில் ஹஜ் யாத்திரிகர்கள் எதிர்நோக்கும் சிக்கல்களைத் தவிர்க்கவும் வழிவகுக்கும்.”
கடந்த புனித ஹஜ் யாத்திரையின்போது இலங்கை யாத்திரிகர்கள் எதிர்நோக்கிய பல்வேறு கடுமையான சிரமங்கள் மற்றும் அவை தொடர்பாக சமூகத்தில் எழுந்துள்ள குழப்ப நிலை காரணமாக, இவ்விடயம் குறித்து அனைத்து தரப்பினரின் பங்களிப்புடனான விரிவான கலந்துரையாடல் அவசியமாகியுள்ளது என்று இக்கடிதத்தில் வலியுறுத்திக் குறிப்பிடப்பட்டுள்ளது.

