அமெரிக்கா மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகளுக்கிடையே அமைதியான முறையில் அணுசக்தி ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தம் மற்றும் அதனுடன் இணைந்த இருதரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக அமெரிக்க எரிசக்தி திணைக்களம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அமெரிக்க எரிசக்தி திணைக்களச் செயலாளர் கிறிஸ் ரைட் (Chris Wright) மற்றும் சவூதி அரேபியாவின் எரிசக்தி அமைச்சர் இளவரசர் அப்துல் அஜீஸ் பின் சல்மான் ஆகியோர் இந்த உடன்படிக்கைகளில் கையெழுத்திட்டுள்ளனர்.
இந்த அமைதியான அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் மூலம், சவூதி அரேபியாவின் அணுசக்தித் திட்டங்களில் அமெரிக்க தொழில்முறை நிறுவனங்கள் ஈடுபடுவதற்கான “பெரிய அளவிலான அணுகல்” (Substantial Access) சாத்தியமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், “அமைதியான அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம்” மற்றும் “இருதரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம்” ஆகிய இரு முக்கிய பிரிவுகளைக் கொண்ட இந்த உடன்படிக்கை, உலகளாவிய ரீதியில் அணு ஆயுதப் பரவல் தடுப்புத் தரநிலைகளை (Non-proliferation Standards) மேலும் வலுப்படுத்தும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தற்போது கையெழுத்தாகியுள்ள இந்த ஒப்பந்தம், இறுதி ஒப்புதல் மற்றும் விரிவான மதிப்பாய்வுக்காக அமெரிக்க காங்கிரஸுக்கு (US Congress) அனுப்பி வைக்கப்படவுள்ளது.
அதேவேளை, இந்த ஒப்பந்தம் எதிர்காலத்தில் அணு ஆயுதப் பரவலுக்கு வழிவகுத்துவிடுமோ என்ற அச்சமும், கவலையும் அமெரிக்க அரசியல் வட்டாரங்களிலும், மத்திய கிழக்கில் அமெரிக்காவின் முக்கிய பங்காளியான இஸ்ரேலிலும் எழுந்துள்ளது.
