இலங்கையில் இந்த ஆண்டில் இதுவரை 63,835 டெங்கு நோய்த் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும், டெங்கு நோய்த் தொற்றினால் இந்த ஆண்டில் 42 உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் தரவுகள் தெரிவிக்கின்றன.
நோய்த்தொற்றால் ஏற்படும் இறப்பு விகிதம் 0.07 சதவீதமாக உள்ளது.
அண்மைய தரவுகளின்படி 2026 ஜூலை 7 நள்ளிரவு வரையிலான நிலவரப்படி, ஜூன் மாதத்தில் அதிகபட்சமாக 21,543 நோய்த்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
அதைத் தொடர்ந்து மே (8,590) மற்றும் ஜூலை (8,451) மாதங்களில் அதிகளவான நோய்த் தொற்றுகள் பதிவாகியுள்ளன.
மாவட்ட வாரியான தரவுகளின்படி, கொழும்பு (12,968 சம்பவங்கள்) மற்றும் கம்பஹா (12,929 சம்பவங்கள்) ஆகிய மாவட்டங்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
இவை இரண்டும் இணைந்து நாட்டின் மொத்த எண்ணிக்கையில் 40 சதவீதத்திற்கும் அதிகமான பங்கைக் கொண்டுள்ளன.
அதிக ஆபத்துள்ள பிற மாவட்டங்களில் மாத்தறை (4,556), களுத்துறை (4,013), கண்டி (4,003), இரத்தினபுரி (3,734) மற்றும் காலி (3,719) ஆகியவை அடங்கும்.
மாகாண வாரியாகப் பார்க்கையில், மேல் மாகாணம் 33,572 சம்பவங்களுடன் (52.6%) முன்னிலையில் உள்ளது.
அதைத் தொடர்ந்து தென் மாகாணம் (10,066), சப்ரகமுவ மாகாணம் (5,462) மற்றும் மத்திய மாகாணம் (4,783) ஆகியவை உள்ளன.
வட மாகாணம் மற்றும் வட-மத்திய மாகாணம் ஆகியவற்றில் தலா 1,000-க்கும் குறைவான சம்பவங்களே பதிவாகியுள்ளன.
டெங்கு தடுப்பின் 26 ஆவது வாரத்தில் அதிகாரிகள் 142 அதிக ஆபத்துள்ள சுகாதார மருத்துவ அதிகாரி பகுதிகளை அடையாளம் கண்டுள்ளனர்.
இக்காலகட்டத்தில் தினமும் சராசரியாக 2,604 புதிய நோய்த்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
