இலங்கைக்கும் குவைத்திற்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை வலுப்படுத்துவதற்கான விசேட சந்திப்பொன்று, வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க மற்றும் இலங்கைகான குவைத் தூதுவர் சலே முபாரக் அல்-சாராவி (H.E. Saleh Mubarak Al-Sarawi) ஆகியோருக்கு இடையே அமைச்சின் வளாகத்தில் இடம்பெற்றது.
இச்சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தக அளவை அதிகரித்தல், நேரடி வெளிநாட்டு முதலீடுகளை (FDI) ஈர்த்தல் மற்றும் சுற்றுலாத்துறையில் புதிய ஒத்துழைப்புகளைக் கட்டியெழுப்புதல் தொடர்பாக விரிவாகக் கலந்தாலோசிக்கப்பட்டது.
குவைத் வர்த்தக சபைக்கும் இலங்கை வர்த்தகர்களுக்கும் இடையே நேரடி தொடர்புகளை ஏற்படுத்துவதற்கும், வணிக பிரதிநிதிகள் குழுக்களைப் பரிமாறிக்கொள்வதற்கும் இணக்கம் தெரிவிக்கப்பட்டது.
விவசாயம், பால் உற்பத்தி, கால்நடை வளர்ப்பு, உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்துத் துறைகளில் உள்ள முதலீட்டு வாய்ப்புகள், ஊக்கத்தொகைகள் மற்றும் வரிச் சலுகைகள் குறித்துக் குவைத் தூதுவருக்கு விளக்கமளிக்கப்பட்டது.
குவைத்தில் அதிக தேவைக் கொண்ட இலங்கையின் அன்னாசி, மாம்பழம் போன்ற பழங்களின் ஏற்றுமதிச் செயல்முறையை மேலும் முறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார்.
குவைத்தில் பணிபுரியும் இலங்கை வீட்டுப் பணியாளர்கள் மற்றும் தொழில்வல்லுநர்களின் பங்களிப்பைப் பாராட்டிய தூதுவர், இலங்கை உத்திபூர்வ முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அழகான நாடு எனவும், இரு நாடுகளின் பொருளாதார உறவுகளைப் புதிய பரிமாணத்திற்கு எடுத்துச் செல்லக் குவைத்தின் முழுமையான ஆதரவு எப்போதும் வழங்கப்படும் என்றும் வலியுறுத்தினார்.
