போரினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள காசா பகுதி குழந்தைகளின் கல்வித் தேவைகளை மறுசீரமைப்பதற்காக, ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த கோடீஸ்வரரான ரோஜர் அகெலியஸ் ‘யுனிசெஃப் ஸ்வீடன்’ (UNICEF Sweden) அமைப்புக்கு 800 மில்லியன் ஸ்வீடிஷ் குரோனர் (சுமார் $76 மில்லியன்) நிதியுதவி வழங்கியுள்ளார்.
யுனிசெஃப் ஸ்வீடன் அமைப்பின் வரலாற்றிலேயே ஒரு தனிநபரால் வழங்கப்பட்ட மிகப்பாரிய நிதியுதவி இதுவேயாகும்.
இந்த நிதியுதவியின் மூலம் காசாவில் சுமார் 400 பள்ளிகள் மற்றும் கற்றல் மையங்கள் நிறுவப்படவுள்ளன. இதன் மூலம் போரினால் பாதிக்கப்பட்டுள்ள சுமார் 100,000 குழந்தைகளுக்குக் கல்வி, தினசரி உணவு மற்றும் பாதுகாப்பான கற்றல் சூழல் ஆகியவை வழங்கப்படவுள்ளன.
காசாவின் பெரும்பாலான பள்ளி உள்கட்டமைப்புகள் சேதமடைந்து அல்லது முற்றிலுமாக அழிக்கப்பட்டு, லட்சக்கணக்கான குழந்தைகள் முறையான கல்வியை இழந்து தவித்து வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பங்களிப்பை யுனிசெஃப் மனதார வரவேற்றுள்ளது. காசா குழந்தைகள் மீண்டும் தங்களின் கல்வியைத் தொடரவும், இந்த மனிதாபிமான நெருக்கடிக்கு மத்தியில் புதிய நம்பிக்கையைப் பெறவும் இது ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என்று யுனிசெஃப் தெரிவித்துள்ளது.
கள நிலவரங்களைப் பொறுத்து தற்காலிக மற்றும் நிரந்தரப் பள்ளிக் கட்டிடங்களின் கலவையாக இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் என அகெலியஸ் அறக்கட்டளை (Akelius Foundation) குறிப்பிட்டுள்ளது.
காசாவுக்காக ஸ்வீடன் அரசு யுனிசெஃப் மூலம் ஏற்கனவே அறிவித்திருந்த மனிதாபிமான உதவித் திட்டத்தைத் தொடர்ந்து, தற்போது இந்தத் தனியார் அறக்கட்டளையின் பெரும் நிதியுதவியும் இணைந்துள்ளது காசா குழந்தைகளின் எதிர்காலத்திற்குப் பெரும் பலமாகப் பார்க்கப்படுகிறது.
