இலங்கை மருத்துவ சங்கத்தின் (SLMA) பிரதிநிதிகள், 2026 ஜூலை 08 அன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் (ACJU) தலைமையகத்திற்கு வருகை தந்து அதன் நிறைவேற்றுக் குழுவினருடன் விசேட சந்திப்பொன்றில் ஈடுபட்டனர்.
நாடளாவிய ரீதியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வீதி விபத்துகளைக் கட்டுப்படுத்துவதற்கான முறையான திட்டங்கள் மற்றும் பொறிமுறைகள் குறித்துக் கலந்துரையாடும் நோக்கில் இச்சந்திப்பு நடைபெற்றது.
இச்சந்திப்பின் போது கருத்துத் தெரிவித்த மருத்துவ சங்கத்தின் பிரதிநிதிகள், கடந்த 6 மாதங்களில் மட்டும் இலங்கையில் ஏற்பட்ட வீதி விபத்துகளினால் சுமார் 1,460-க்கும் மேற்பட்டோர் பலியாகியிருப்பதாகக் கவலை வெளியிட்டனர்.
மேலும், எதிர்காலத்தில் விபத்துகளைக் கட்டுப்படுத்த அரசாங்கம் முன்னெடுக்கும் விழிப்புணர்வு வேலைத்திட்டங்களுக்குச் சமய மற்றும் சமூக நிறுவனங்களின் முழுமையான ஒத்துழைப்பினை எதிர்பார்ப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இதற்குப் பதிலளித்துப் பேசிய ஜம்இய்யாவின் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித் அவர்கள், வீதி விபத்துகளைக் கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் அனைத்து விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தனது முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என்று உறுதியளித்தார்.
இலங்கை மருத்துவ சங்கத்தின் ‘சாலைப் போக்குவரத்து விபத்து தடுப்பு தொடர்பான நிபுணர் குழுவின்’ தலைவர் பேராசிரியர் சமத் தர்மசேன அவர்களின் வழிகாட்டலின் கீழ், வைத்தியர் ருவன் துஷார மெட்டிவலகே உள்ளிட்ட குழுவின் பிரதிநிதிகள் இச்சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.
ஜம்இய்யா சார்பில் அதன் பதில் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர், உப பொதுச் செயலாளர்கள் மற்றும் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் எனப் பல முக்கியப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

