அயோத்தியில் உள்ள பாபர் மசூதி இடிக்கப்பட்டிருக்கக் கூடாது என்ற கருத்தை வெளிப்படுத்துவதை “தேச விரோதமானது” என்று கூற முடியாது என பம்பாய் உயர் நீதிமன்றம் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளது.
ஜனநாயக நாட்டில் மாறுபட்ட கருத்துகளைக் கொண்டிருக்க ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உண்டு என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
இந்திய சமூக ஜனநாயகக் கட்சியின் நிர்வாகியான ஃபிரோஸ் அப்துல் வஹாப் கானுக்கு எதிராக மும்பை காவல்துறை பிறப்பித்த ஓராண்டு நாடு கடத்தல் (நகர எல்லைக்குள் நுழையத் தடை) உத்தரவை ரத்து செய்து நீதிபதி மாதவ் ஜம்தார் இந்த முக்கிய உத்தரவைப் பிறப்பித்தார்.
பாரபட்சமான நடவடிக்கை குறித்து நீதிமன்றம் கேள்வி:
டிசம்பர் 2025-ல் வக்ஃப் திருத்த மசோதாவுக்கு எதிரான போராட்டங்கள், காற்று மாசுபாடு தொடர்பான ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பாபரி மசூதி இடிப்பு தொடர்பான போராட்டங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் SDPI நிர்வாகிகளுக்கு எதிராக மும்பை காவல்துறை இந்த நடவடிக்கையை எடுத்திருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜம்தார், “இதே போராட்டங்களில் காங்கிரஸ் மற்றும் சிவசேனா (UBT) உள்ளிட்ட மற்ற அரசியல் கட்சிகளின் தொண்டர்களும் பங்கேற்றிருந்த நிலையில், மனுதாரர்கள் மட்டும் ஏன் தனியாகக் குறிவைக்கப்படுகிறார்கள்? அவர்கள் ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதற்காக மட்டும் நடவடிக்கை எடுக்கப்படுகிறதா? அரசு நிர்வாகம் ஒருதலைப்பட்சமாகச் செயல்படக் கூடாது” என்று வாய்மொழியாகக் கேள்வி எழுப்பினார்.
இதேபோன்று நாடு கடத்தல் உத்தரவை எதிர்த்து SDPI-ன் மற்றொரு உறுப்பினரான முகமது ரஃபிக் குலாம் ரசூல் அன்சாரி தாக்கல் செய்த மனுவையும் உயர் நீதிமன்றம் தற்போது விசாரித்து வருகிறது.
