கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு புதிதாக நியமனம் பெற்ற 9 சுகாதார உதவியாளர்கள், தங்களது மத மற்றும் கலாச்சார விழுமியங்களைப் பேணி சீருடை அணிவதற்கு வைத்தியசாலையின் பணிப்பாளரினால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அரச ஊழியர்களுக்கான சீருடை தொடர்பான அரச சுற்றுநிருபத்தில் மத மற்றும் கலாச்சார அடையாளங்களைப் பேணி சீருடை அணிவது தெளிவாக அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவ்வாறு அணியும் போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டல்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.
இந்நிலையில், குறித்த சுற்றுநிருபத்திற்கு முரணாக வைத்தியசாலையின் பணிப்பாளர் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பாதிக்கப்பட்ட தரப்பினர் சுட்டிக்காட்டுகின்றனர்.
இப்பிரச்சினை குறித்த முறைப்பாடு கிடைக்கப்பெற்றதைத் தொடர்ந்து, சமூக நீதிக்கட்சியின் தலைவர்கள் நேற்றைய தினம் (09.08.2026) வைத்தியசாலைக்கு நேரடி கள விஜயம் ஒன்றை மேற்கொண்டனர்.
இவ்விஜயத்தில் சமூக நீதிக்கட்சியின் தலைவர் அர்க்கம் முனீர், பொதுச் செயலாளர் சட்டத்தரணி ரஷாத் அஹமத், பொருளாளர் சட்டத்தரணி இல்ஹாம் ஹஸனலி, தேசிய அமைப்பாளர் இர்பான் பன்னா, டிஜிட்டல் ஊடக செயலாளர் ஸப்ரீன் அஹமத் மற்றும் இப்பிரச்சினைக்குத் தீர்வு காண முன்னின்று செயற்பட்டு வரும் நற்பிட்டிமுனை அல் அக்ஸா பாடசாலையின் அதிபர் பதியுதீன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன்போது பாதிக்கப்பட்ட அரச ஊழியர்களை நேரில் சந்தித்து விவரங்களைக் கேட்டறிந்த தலைவர்கள், சீருடைக்கான அனுமதி மறுக்கப்பட்டமைக்கான காரணத்தை எழுத்துப்பூர்வமாகப் பணிப்பாளரிடமிருந்து பெற்றுக்கொள்ளுமாறு அவர்களுக்கு வழிகாட்டினர்.
மேலும், இது தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய அலுவலகத்தில் உடனடியாக முறைப்பாடு செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், இப்பிரச்சினையை சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸவின் நேரடி கவனத்திற்கு கொண்டு செல்லவும் சமூக நீதிக்கட்சி தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
