கொழும்பு நகரத்திற்குள் பிரவேசிக்கும் பிரதான வீதிகளில் ஒன்றான ஒருகொடவத்தை – அம்பதலே வீதியில் காலை மற்றும் மாலை வேளைகளில் ஏற்படும் கடுமையான போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வாக, இவ்வீதியை அபிவிருத்தி செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன்கீழ், வீதியிலுள்ள பாலங்கள் மற்றும் வீதி அமைப்பை அகலப்படுத்தி அபிவிருத்தி செய்ய திட்டமிடப்பட்டது.
ஒரு கொடவத்தை – அம்பதலே பிரதான வீதி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்டுள்ள 3 பிரதான பாலங்களின் நிர்மாணப் பணிகள் தற்போது விரைவாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
2025 ஆம் ஆண்டு ஜனவரி 23 ஆம் திகதி அபிவிருத்திப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட இலக்கம் 2/3 களு பாலம் மற்றும் இலக்கம் 9/1 பாலம் ஆகியவற்றின் பணிகளை 2026 ஆம் ஆண்டு நிறைவடைவதற்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டு பெப்ரவரி 26 ஆம் திகதி பணிகள் ஆரம்பிக்கப்பட்ட இலக்கம் 4/1 பாலத்தின் நிர்மாணப் பணிகள் எதிர்வரும் 2027 மே மாதத்தில் நிறைவடையவுள்ளன.
சர்வதேச அபிவிருத்திக்கான ஓபெக் நிதியம் (OFID) மற்றும் சர்வதேச அபிவிருத்திக்கான சவூதி நிதியம் (SFD) ஆகியவை இத்திட்டத்திற்கு நிதியுதவி வழங்குகின்றன. இந்த மூன்று பாலங்களுக்காகவும் 1,546 மில்லியன் ரூபா செலவிடப்படுகிறது.
இத்திட்டத்தின் மூலம் ஒருகொடவத்தை, வெல்லம்பிட்டிய, கொட்டிகாவத்தை, அங்கொட, கல்வான மற்றும் அம்பதலே ஆகிய பிரதான சந்திகளில் நிலவும் கடுமையான போக்குவரத்து நெரிசல் குறைந்து, பொதுமக்கள் குறைந்த நேரத்தில் தமது இலக்குகளை அடைய வாய்ப்பு ஏற்படும்.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலில் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் திட்டப்பணியாக நடைமுறைப்படுத்தப்படும் இப் பாலங்கள் திட்டத்தின் அபிவிருத்திப் பணிகளை ELS நிர்மாண நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
7.7 கிலோமீற்றர் நீளம் கொண்ட ஒருகொடவத்தை – அம்பதலே பிரதான வீதியில் 08 பாலங்களை அபிவிருத்தி செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், அவற்றில் ஐந்து பாலங்களின் அபிவிருத்திப் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன.
இந்த 08 பாலங்களினதும் நிர்மாணப் பணிகளுக்காக 2.5 பில்லியன் ரூபா நிதி செலவிடப்பட்டுள்ளது. பாலங்கள் திட்டத்திற்கு இணையாக, பிரதான வீதியை கார்ப்பட் இட்டு அபிவிருத்தி செய்வதற்காக 4.2 பில்லியன் ரூபா செலவிடப்படுவதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பல்வேறு வெளிநாட்டு உதவித் திட்டப் பிரிவின் திட்டப் பணிப்பாளர் ஐ. கே. பத்தேகம தெரிவித்தார்.
