இஸ்லாமிய மார்க்கத்திற்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து வெளியிட்டதாகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக, பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் புதன்கிழமை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி புத்திக சி. ரகால முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கின் மேலதிக விசாரணைகளை வரும் செப்டம்பர் 30 ஆம் திகதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் 2019 ஆம் ஆண்டு ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பு செல்லாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த சில நாட்களிலேயே அவர் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட 6 ஆண்டுகள் சிறைத்தண்டனையில் சுமார் 9 மாதங்கள் சிறைவாசம் அனுபவித்த நிலையிலேயே அவருக்கு அப்போது பொதுமன்னிப்பு வழங்கப்பட்டிருந்தது.
இதனிடையே, உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து சிறைச்சாலை அதிகாரிகள் நாவல வீதியில் அமைந்துள்ள ஞானசார தேரரின் விகாரைக்குச் சென்றதாகவும், ஆனால் அவர் எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை என அங்குள்ளவர்கள் கூறியதாகவும் ‘தி சண்டே ஐலண்ட்’ நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது.
எனினும், இக்கருத்தை ஞானசார தேரருக்கு நெருக்கமான தரப்பினர் மறுத்துள்ளனர். சிறைச்சாலை அதிகாரிகள் எவரும் விகாரைக்கு வரவில்லை என்றும், அவர் தலைமறைவாக இருப்பதாகக் கூறப்படும் செய்திகளில் உண்மையில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி பொதுமன்னிப்பு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மேல்நடவடிக்கை எடுப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் முழுமையான தீர்ப்புப் பிரதியை எதிர்நோக்கியிருப்பதாக பொலிஸார் தனிப்படத் தெரிவித்துள்ளனர்.
ஞானசார தேரர் புதன்கிழமை ஆஜரான இந்த வழக்கு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கிலிருந்து முற்றிலும் வேறுபட்டது என்பதும், இஸ்லாம் தொடர்பான கருத்துகள் தொடர்பானது என்பதும் குறிப்பிடத்தக்கது.
