ஆங்கிலம், சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளிலான ‘இஸ்லாமியக் கலைச்சொற்களுக்கான மும்மொழி அகராதி’ (Trilingual Glossary of Islamic Terminologies) ஒன்றை உருவாக்கும் திட்டத்தின் முதற்கட்ட அமர்வு, 2026 ஆகஸ்ட் 19 அன்று பேருவளை ஜாமியா நளீமிய்யா இஸ்லாமிய கலாபீடத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இலங்கையில் முறைசார்ந்த மற்றும் விரிவான இஸ்லாமியக் கலைச்சொல் அகராதிய ஒன்றின் அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் உணர்ந்து, அரச கரும மொழிகள் திணைக்களம், ஜாமியா நளீமிய்யா இஸ்லாமிய கலாபீடத்துடன் இணைந்து இத்திட்டத்தை முன்னெடுத்துள்ளது.
முன்மொழியப்பட்டுள்ள இந்த அகராதியானது அடிப்படை இஸ்லாமியக் கருத்துக்கள், மத நடைமுறைகள், இஸ்லாமிய கலாசாரம் மற்றும் பாரம்பரியம் சார்ந்த கலைச்சொற்களை உள்ளடக்கியதாக அமையும்.
இது இஸ்லாமியக் கல்வி, கல்வியியல் ஆய்வுகள், மொழிபெயர்ப்பு, அதிகாரப்பூர்வ தொடர்பாடல் மற்றும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு மிகச் சிறந்த வழிகாட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிகழ்வில் அரச கரும மொழிகள் திணைக்களம் மற்றும் ஜாமியா நளீமிய்யா கலாபீடத்தின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு அகராதியின் எல்லை, முறைமைகள் மற்றும் தொகுப்பு நடைமுறைகள் குறித்து விரிவாகக் கலந்தாலோசித்தனர்.
பங்கேற்ற பிரதிநிதிகள்:
கலாநிதி தம்மிக ஜயசிங்க – சிங்களத்துறை, ருஹுண பல்கலைக்கழகம்
திருமதி தரங்கனி ரேசிகா – அபிவிருத்தி அதிகாரி, கலைச்சொல் தொகுப்புப் பிரிவு, அரச கரும மொழிகள் திணைக்களம்
திரு. சன்க சொந்துருவில – அபிவிருத்தி அதிகாரி, மொழி ஆராய்ச்சிப் பிரிவு, அரச கரும மொழிகள் திணைக்களம்
திருமதி ஜயனி அபேகோன் – அபிவிருத்தி அதிகாரி, கலைச்சொல் தொகுப்புப் பிரிவு, அரச கரும மொழிகள் திணைக்களம்
கலாநிதி அஷ்-ஷைக் A.P.M. அப்பாஸ் – ஜாமியா நளீமிய்யா இஸ்லாமிய கலாபீடம்
கலாநிதி அஷ்-ஷைக் M.R.M. அர்காம் – ஜாமியா நளீமிய்யா இஸ்லாமிய கலாபீடம்
அஷ்-ஷைக் ஹஸன் முராத் – ஜாமியா நளீமிய்யா இஸ்லாமிய கலாபீடம்
அஷ்-ஷைக் M.L.M. ரினாஸ் – நளீமியா இஸ்லாமிய ஆய்வுக் கழகம்
மேலும், இந்நிகழ்வில் ஜாமியா நளீமிய்யா இஸ்லாமிய கலாபீடத்தின் முதல்வர் ஏ.ஸீ. அகார் முஹம்மத் சிறப்பதிதியாகக் கலந்துகொண்டார்.
காலத்திற்குப் பொருத்தமான இந்த முக்கிய முயற்சியை முன்னெடுத்த அரச கரும மொழிகள் திணைக்களத்திற்கு ஜாமியா நளீமிய்யா இஸ்லாமிய கலாபீடம் தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டதுடன், இத்திட்டத்தின் வெற்றிகரமான நிறைவுக்காகத் தொடர்ந்து ஒத்துழைக்க எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளது.
