எகிப்திய கவிஞரும் அரசியல் ஆர்வலருமான அப்துல் ரஹ்மான் யூசுப் அல்-கர்ளாவிக்கு (Abdel Rahman Youssef al-Qaradawi) ஐக்கிய அரபு அமீரக (UAE) ஜனாதிபதி ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் திடீர் ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியுள்ளார்.
அமீரகத்தின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான ‘வாம்’ (WAM) இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.
முன்னதாக, அபுதாபி கூட்டாட்சி மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் இணையவழிக் குற்றப்பிரிவு (Cybercrime Circuit), பொதுப் பாதுகாப்பிற்குப் பாதகமான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி அப்துல் ரஹ்மானுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 200,000 திர்
ஹாம் (சுமார் 54,000 அமெரிக்க டாலர்) அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. தீர்ப்பு வெளியான சில நாட்களிலேயே இந்த ஜனாதிபதி மன்னிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல இஸ்லாமிய அறிஞர் மறைந்த யூசுப் அல்-கர்ளாவியின் மகனான அப்துல் ரஹ்மான், சிரியாவிற்குச் சென்று திரும்பிய பின்னர் லெபனானில் வைத்து கைது செய்யப்பட்டார். லெபனான் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அவர், ஐக்கிய அரபு அமீரகத்திற்கு நாடு கடத்தப்பட்டார்.
நாடு கடத்தப்பட்டதை அடுத்து, அமீரகத்தில் அவரது இருப்பிடம் குறித்து எந்தத் தகவலும் வெளியாகாமல் அவர் காணாமல் போயிருந்தார். இது மனித உரிமைகள் அமைப்புகள் மற்றும் சர்வதேச அமைப்புகளிடையே பெரும் கவலையையும் விமர்சனத்தையும் ஏற்படுத்தியிருந்தது.
தற்போது வழங்கப்பட்டுள்ள ஜனாதிபதி மன்னிப்பைத் தொடர்ந்து, அவரை விடுவிப்பதற்கான நடைமுறைகள் தொடங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அவர் எப்போது விடுவிக்கப்படுவார் அல்லது வேறு நாட்டிற்கு அனுப்பப்படுவாரா என்பது குறித்த மேலதிக விவரங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.
