ஃபேஸ்புக் சமூக வலைதளத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்படும் போலியான கணக்குகள் மற்றும் அரசியல் தொடர்பான ‘டீப்ஃபேக்’ (Deepfake) வீடியோக்கள், இலங்கையின் ஜனநாயகப் பண்பாட்டிற்கும் தேர்தல் அமைப்பிற்கும் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளதாக புதிய ஆய்வு அறிக்கை ஒன்று எச்சரித்துள்ளது.
இலங்கைப் பிரதமர் ஹரிணி அமரசூரியவின் உருவத்தைப் போலி செய்து உருவாக்கப்பட்ட வீடியோக்கள் 1.2 மில்லியனுக்கும் (12 லட்சம்) அதிகமான பார்வைகளைப் பெற்றதைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சுயாதீன ஆராய்ச்சியாளரான கலாநிதி சஞ்சன ஹத்தொட்டுவ எழுதிய “From bedrooms to Parliament: AI women, political deepfakes, and Facebook’s growing failures” என்ற தலைப்பிலான அறிக்கையிலேயே இந்த அதிர்ச்சித் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
ஆரம்பத்தில் போலி ஏஐ பெண் கணக்குகள் மூலம் பார்வையாளர்களை ஈர்த்து, அவர்களை ஆபாச அரட்டைகள், சூதாட்டம் மற்றும் கிரிப்டோகரன்சி போன்ற நிதி சார்ந்த தளங்களுக்குத் திருப்பிவிடும் நோக்கில் பயன்படுத்தப்பட்ட இந்த தொழில்நுட்பம், தற்போது அரசியல் போலிப் பிரசாரங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டு வருவதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
பிரதமர் ஹரிணி அமரசூரிய பேசாத வார்த்தைகளைப் பேசுவது போன்று செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட 10 வீடியோக்கள் ஃபேஸ்புக்கில் உலா வந்துள்ளன.
அதில், கொசுக்களை ஓரினச்சேர்க்கையாளர்களாக மாற்றுவதன் மூலம் டெங்கு நோயைக் கட்டுப்படுத்த போவதாகப் பிரதமர் கூறுவது போல் சித்தரிக்கப்பட்ட ஒரு வீடியோ மட்டும் சுமார் 3,24,000 பார்வைகளைப் பெற்றுள்ளது.
இந்த 10 வீடியோக்களும் சேர்த்து மொத்தம் 1.2 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்துள்ளன.
இந்த வீடியோக்கள் உருவாக்கப்பட்டது ஏஐ தொழில்நுட்பம் தான் என்பதைக் காட்டும் ‘வாட்டர்மார்க்’ (Watermark) சில வீடியோக்களில் இருந்தபோதிலும், ஃபேஸ்புக் நிறுவனம் இது ஏஐ மூலம் உருவாக்கப்பட்டது என்பதற்கான எந்தவொரு அதிகாரப்பூர்வ எச்சரிக்கை அறிவிப்பையும் அப்பக்கங்களில் காண்பிக்கவில்லை.
மேலும், இந்த போலி வீடியோக்களின் பின்னூட்டங்களில் (Comments) பிரதமருக்கு எதிரான பாலின ரீதியான வசைபாடல்கள் இடம்பெற்றிருப்பதுடன், சிலர் அந்த போலி உரைகளை உண்மை என்றே நம்பி கருத்து தெரிவித்துள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது.
இவ்வாறான போலி கணக்குகள் மற்றும் ஏஐ கட்டமைப்பு வருங்கால ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்கள், அரசியல் விவாதங்கள் மற்றும் நாட்டின் நிர்வாக அமைப்பில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என கலாநிதி சஞ்சன ஹத்தொட்டுவ எச்சரித்துள்ளார்.
இந்த ஆய்வின் முடிவுகள் பிரதமர் ஹரிணி அமரசூரியவின் கவனத்திற்கு அதிகாரப்பூர்வமாகக் கொண்டு செல்லப்பட்டுள்ளன. இதன்படி, செப்டம்பர் 7 ஆம் திகதியிட்ட கடிதம் மூலம் பிரதமர் அலுவலகத்திற்கு இந்த அறிக்கையை அனுப்பியுள்ள கலாநிதி சஞ்சன, ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான ‘மெட்டா’விடம் (Meta) இருந்து பொறுப்புமிக்க பதிலைப்பெற நடவடிக்கை எடுக்குமாறு பிரதமரைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
அத்துடன் சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் வரும் இவ்வாறான போலி ஏஐ வீடியோக்களைக் கண்டறிந்து அடையாளப்படுத்துவதற்கும், பாலின ரீதியான அச்சுறுத்தல்களைத் தடுப்பதற்கும் உடனடி நடவடிக்கைகள் தேவை என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் எந்தவொரு தனிப்பட்ட அரசியல் கட்சிக்கும் பேரழிவு அல்ல என்று குறிப்பிட்டுள்ள அவர், ஏஐ கணக்குகள் அரசாங்கத்திற்கு எதிராகவும், அதேவேளை அரசாங்கத்திற்கு ஆதரவாக அரசியல் எதிராளிகளைத்ாக்குவதற்கும் பயன்படுத்தப்பட்டு வருவதாகச் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே மெட்டா நிறுவனம், இலங்கை அதிகாரிகள், தேர்தல் ஆணைக்குழு மற்றும் சுயாதீன ஆராய்ச்சியாளர்கள் இணைந்து இந்த ஆபத்துகளைத் தடுக்கத் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
