முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட மூவர் அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளின் நிமித்தம் தாம் சட்டத்திற்கு புறம்பாக கைதுசெய்யப்படுவதை தடுக்கும் வகையில் உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் ஷானி அபேசேகர மற்றும் ரவி செனவிரத்ன உள்ளிட்டோர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு மீதான விசாரணையின் பின்னரே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணையொன்றை மேற்கொள்ளுமாறு கோரி ஓய்வுப்பெற்ற முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் பாலித சிறிவர்தன முறைப்பாடொன்றை தாக்கல் செய்திருந்தார்.
குறித்த முறைப்பாட்டிற்கமைய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் தற்போதைய பிரதி பொலிஸ் மா அதிபர் ஷானி அபேசேகர உள்ளிட்டோர் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்ததன் ஊடாக அப்போதைய பொலிஸ் மா அதிபராக இருந்த தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட மூவர், மனுதாரர்களின் அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதற்கென குறித்த முறைப்பாட்டினை தாக்கல் செய்த ஓய்வுப்பெற்ற பிரதி பொலிஸ் மா அதிபர் பாலித சிறிவர்தனவினால் தலா 50 ஆயிரம் ரூபாவும், இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்த குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் அப்போதைய பிரதான பொலிஸ் பரிசோதகர் இந்துக டி சில்வாவினால் தலா 10 ஆயிரம் ரூபாவும் மனுதாரர்களான ஷானி அபேசேகர மற்றும் ரவி செனவிரத்னவிற்கு இழப்பீடாக செலுத்த வேண்டுமென தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரதிவாதியான ஓய்வுப்பெற்ற முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் பாலித சிறிவர்தன குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் ஊடாக மேற்கொண்ட விசாரணைகள் அரசியல் நோக்கங்களுக்காக மேற்கொள்ளப்பட்டவை என்றும் இதன் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் மூலம் மனுதாரரர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
