சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகள் குழுவொன்று விரிவாக்கப்பட்ட நிதி வசதித் திட்டத்தின் (Extended Fund Facility) ஏழாவது மீளாய்வு தொடர்பில் இலங்கை அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதற்காக அடுத்த வாரம் இலங்கைக்கு வரவுள்ளது.
IMF இன் இலங்கைக்கான பணிக்குழுத் தலைவர் இவான் பபகியோர்ஜியூ தலைமையிலான இந்தக் குழு, செப்டம்பர் 10 முதல் 23ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, அண்மைய பொருளாதார முன்னேற்றங்கள், சீர்திருத்தக் கொள்கை கட்டமைப்புகள் மற்றும் நீண்டகால மூலோபாய சவால்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன.
இலங்கையுடனான IMF இன் தற்போதைய வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்த விஜயம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சீர்திருத்தங்களின் முன்னேற்றத்தைக் கண்காணித்தல் மற்றும் நாட்டின் நிதி மற்றும் கடன் முகாமைத்துவ உத்திகளை மதிப்பீடு செய்தல் ஆகியவையும் இந்த வேலைத்திட்டத்தில் உள்ளடங்குகின்றன.
மேலும், விரிவாக்கப்பட்ட நிதி வசதித் திட்டத்துடன் தொடர்புடைய சீர்திருத்த வேலைத்திட்டம் குறித்தும் இந்தக் கலந்துரையாடல்களில் முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
