நாட்டின் பல பகுதிகளில் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.
இந்த எச்சரிக்கைகள் நாளை (16) காலை 10.00 மணி வரை நடைமுறையில் இருக்கும்.
கொழும்பு மாவட்டத்தில் உள்ள சீதாவக்க பிரதேச செயலகப் பிரிவு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு நிலை-1 (மஞ்சள்) எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
இதேபோன்று, களுத்துறை மாவட்டத்தில் உள்ள தொடங்கொட, புலத்சிங்கள, பேருவளை, இங்கிரிய, மத்துகம, பாலிந்தநுவர மற்றும் வளல்லவிட்ட ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் நிலை-1 எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
கேகாலை மாவட்டத்தில், வரக்காபொல மற்றும் ருவன்வெல்ல பிரதேச செயலகப் பிரிவுகள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளும் நிலை-1 எச்சரிக்கையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள் மண்சரிவுகள், பாறைகள் சரிந்து விழுதல், தரை அல்லது சுவர்களில் விரிசல் ஏற்படுதல் மற்றும் மரங்கள் முறிந்து அல்லது சரிந்து விழுதல் போன்ற ஆபத்துகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
ஏதேனும் அனர்த்தம் ஏற்படும் பட்சத்தில், பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறிச் செல்லுமாறு அவர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
