மத்திய கிழக்கு நெருக்கடி: இலங்கைக்கு உதவத் தயாராக இருப்பதாக ரஷ்யா உறுதி

Date:

மத்திய கிழக்கு போர் சூழலால் இலங்கை எதிர்கொள்ளும் எந்தவொரு சவாலையும் முறியடிப்பதற்கு, தமது நாடு இலங்கைக்கு உதவ தயாராக இருப்பதாக ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷவின் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ரஷ்ய பிரதி அமைச்சர், நேற்று (26) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவை சந்தித்த போதே இதனைத் தெரிவித்தார்.

தற்போதைய உலகளாவிய நெருக்கடிக்கு மத்தியில் இலங்கை எதிர்நோக்கும் சவால்கள் குறித்து ரஷ்யா நன்கு புரிந்து வைத்துள்ளதாகக் குறிப்பிட்ட பிரதி அமைச்சர், எரிசக்தி துறையில் மாத்திரமன்றி தொழில்நுட்பம் மற்றும் இயந்திர உபகரணங்கள் போன்ற எந்தவொரு வகையிலும் இலங்கைக்கு உதவத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.

அதேபோல், இலங்கையில் தனக்கு வழங்கப்பட்ட அன்பான வரவேற்புக்கு நன்றிகளைத் தெரிவித்த அவர், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவுகள் இந்த விஜயத்தின் மூலம் மேலும் உறுதிப்படுத்தப்படும் என நம்பிக்கை வெளியிட்டார்.

இலங்கைக்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான நீண்டகால நட்புறவை நினைவு கூர்ந்த ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, கடந்த காலங்களில் சோவியத் ரஷ்யா இலங்கைக்கு வழங்கிய தொழில்நுட்ப மற்றும் கைத்தொழில் ரீதியான உதவிகள் நாட்டின் பொருளாதாரம் மற்றும் சமூக அபிவிருத்திக்கு பெரும் பக்கபலமாக அமைந்ததாகக் குறிப்பிட்டார்.

அண்மைக்காலமாக இலங்கைக்கு அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் நாடுகளில் ரஷ்யா முன்னிலையில் இருப்பதைச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, பெருமளவிலான இலங்கை மாணவர்களுக்கு கல்வி வாய்ப்புகளை வழங்குவதன் ஊடாக ரஷ்யா வழங்கும் ஒத்துழைப்பு, இரு நாடுகளுக்கும் இடையிலான சமூக-கலாசார உறவுகள் மற்றும் சர்வதேச விவகாரங்களில் இலங்கைக்கு ரஷ்யா வழங்கும் ஆதரவு என்பவற்றையும் நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.

பிரதி அமைச்சரின் இந்த விஜயமானது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கு ஏதுவாக அமையும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இதன்போது நம்பிக்கை வெளியிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

இலங்கை வரலாற்றிலேயே அதிகளவான கடன் தவணைகள் செலுத்தப்பட்ட ஆண்டு 2025.

இலங்கை வரலாற்றிலேயே அதிகளவான கடன் தவணைகள் செலுத்தப்பட்ட ஆண்டு 2025 என...

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளை புத்தாண்டுக்கு முன்னர் வெளியிடப்படும்

2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறு முடிவுகள் சிங்கள மற்றும்...

வரலாற்றுச் சிறப்புமிக்க ‘வளர்பிறை’ சஞ்சிகை வெளியீட்டு விழா

கண்டி, உடுதெனிய முஸ்லிம் மகா வித்தியாலய வரலாற்றில் முதன்முறையாக ஆரம்பப் பிரிவு...

ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஒரு நாள் சேவை இடைநிறுத்தம்!

தனது ஒரு நாள் சேவை உட்பட அனைத்து சேவைகளையும் இன்று (27)...