சமீபத்தில் வெளியான உயர்தரப் (A/L) பெறுபேறுகளில் புத்தளம் மாவட்டத் தமிழ் மொழி மூல மாணவர்கள் படைத்துள்ள வரலாற்றுச் சாதனையை பாராட்டி, பிரபல சமூக ஆர்வலர் தில்ஷான் முகமது தனது முகப்புத்தகத்தில் (Facebook) நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை இட்டுள்ளார்.
அந்தப் பதிவில் தற்போது வெளியாகியிருக்கும் GCE (A/L) உயிரியல் மற்றும் பிரயோக விஞ்ஞான (Bio and Physical science) பிரிவு பெறுபேறுகளில் புத்தளம் மாவட்டத்தில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியை தமிழ் மொழி மூல மாணவர்கள் ஆதிக்கம் செலுத்தியுள்ளமை அவதானிக்க முடியுமாக இருக்கிறது.
பிரபல சிங்கள மொழி பாடசாலைகளின் ஆதிக்கத்தை சவாலுக்கு உட்படுத்துவது இலகுவான காரியமல்ல.
ஏனெனில் ஒரு மாணவர் மருத்துவ பீடம் நுழைந்தாலே ஆச்சரியமாக பார்க்கப்பட்ட காலத்தை கடந்து வந்திருக்கிறோம்.
இந்த கட்டுடைப்புக்கு அடித்தளமிட்டது புத்தளம் ஜனாதிபதி விஞ்ஞான கல்லூரி என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள்.
இந்த கல்லூரியின் வருகையின் பின்னரே புத்தளம் விஞ்ஞான பிரிவுக்கான மைய புள்ளியாக (Hub) உருமாற்றம் பெற்றது.
தற்போதைய பெறுபேறுகளில் உயிரியல் மற்றும் பிரயோக விஞ்ஞான இருபிரிவுகளிலும் மாவட்டத்தின் முதலாம் இடத்தினை (Rank 1) ஜனாதிபதி விஞ்ஞான கல்லூரி பெற்றிருப்பது அதன் இலக்கினை நோக்கி பயணிக்கிறது என்பதற்கான சான்றுகளில் ஒன்றாகும்.
விஞ்ஞான பிரிவுக்கான பிரத்தியோக கல்லூரியை உருவாக்கிய மர்ஹூம் KA பாயிஸ் அவர்களின் எண்ணங்களை அல்லாஹ் பொறுந்திக்கொள்ளட்டும்.
