இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 66,064 ஆக அதிகரித்துள்ளது.
இம்மாதத்தின் முதல் 9 நாட்களில் மாத்திரம் 10,685 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேல் மாகாணத்தில் டெங்கு நோயின் வீரியமிக்க வளர்ச்சி பதிவாகி வருகிறது.
இதுவரை கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவிலான நோயாளர்கள் பதிவாகியிருந்த போதிலும், தற்போது கம்பஹா மாவட்டம் கொழும்பு மாவட்டத்தை முந்திச் சென்று அதிகளவிலான நோயாளர்கள் பதிவாகும் மாவட்டமாக மாறியுள்ளது.
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வரும் நிலையில், இந்த ஆண்டில் இதுவரை 46 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளன.
தற்போது அதிகளவிலான டெங்கு நோயாளர்களின் சதவீதமானது மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளதுடன், அது 52% எல்லையையும் தாண்டியுள்ளது.
இதன்படி, தற்போது அதிகளவிலான நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர். அந்த எண்ணிக்கை 13,556 ஆகும். கொழும்பு மாவட்டத்தில் இந்த ஆண்டில் இதுவரையில் 13,355 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
மிகக் குறைந்த எண்ணிக்கையிலான நோயாளர்கள், அதாவது 40 நோயாளர்கள் மாத்திரமே முல்லைத்தீவு மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர்.
டெங்கு அபாயம் அதிகரித்துள்ளதை அடுத்து, டெங்கு ஒழிப்புத் திட்டங்களும் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குருநாகல் மாவட்டத்தில் அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் பதிவாகும் சுகாதார வைத்திய அதிகாரி (MOH) பிரிவுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, அந்தப் பகுதியில் பல டெங்கு ஒழிப்புத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
