இலங்கை முஸ்லிம்கள் இந்த நாட்டிற்கு ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க பல்வேறு சேவைகள் குறித்த ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பான ‘அபிமானவத் இதிஹாசயக்க லாங்கேய முஸ்லிம் லகுண’ (‘අභිමානවත් ඉතිහාසයක ලාංකේය මුස්ලිම් ලකුණ’) நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் ஏப்ரல் 28, செவ்வாய்க்கிழமை அன்று நடைபெறவுள்ளது.
ருஹுனு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி தம்மிக்க ஜயசிங்க அவர்களால் தமிழ் மொழியிலிருந்து சிங்களத்திற்கு மொழிபெயர்க்கப்பட்ட இந்த நூல், 2026 ஏப்ரல் 28, செவ்வாய்க்கிழமை அன்று பிற்பகல் 2:30 மணிக்கு கண்டி டி.எஸ். சேனநாயக்க வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ புஷ்பதான சங்க மண்டபத்தில் மக்கள் மயப்படுத்தப்படவுள்ளது.
மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோன் தலைமையில் இவ்விழா நடைபெறும். பேராதனைப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறையின் சிரேஷ்ட பேராசிரியர் ரோஹித தசநாயக்க சிறப்புரையாற்றுவார்.
நூலின் மூல ஆசிரியர் கலாநிதி ரவூப் ஸெய்ன் மற்றும் மொழிபெயர்ப்பாளர் கலாநிதி தம்மிக்க ஜயசிங்க ஆகியோர் நூல் குறித்த தமது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வர்.
மதங்களுக்கிடையிலான அமைதி அறக்கட்டளை (IRPF), கண்டி அகில இலங்கை முஸ்லிம் இளைஞர் சங்கம் (YMMA) மற்றும் பஹன மீடியா உள்ளிட்ட பல அமைப்புகள் இணைந்து இந்த விழாவை ஏற்பாடு செய்துள்ளன.
இலங்கை முஸ்லிம்களின் வரலாற்று அடையாளத்தை சிங்கள வாசகர்களிடம் கொண்டு சேர்க்கும் ஒரு முக்கிய முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.