தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நெல்சன் மண்டேலா அறக்கட்டளையின் மண்டபம் நேற்று (22) மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.
பாலஸ்தீன தூதரகம் ஏற்பாடு செய்திருந்த “பாலஸ்தீனம் 36” எனும் வரலாற்று ஆவணத் திரைப்படத்தின் விசேட திரையிடலே இந்த எழுச்சிக்குக் காரணமாக அமைந்தது.
இந்நிகழ்வில் தூதர்கள், பல்வேறு மத அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூக ஆர்வலர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
மண்டேலா அறக்கட்டளையின் தலைவி நலேடி பாண்டூர் மற்றும் பாலஸ்தீன தூதர் ஹனான் ஜரார் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
அவர்கள் தமது உரையில், தென்னாப்பிரிக்காவின் ‘சுதந்திர மாதம்’ பாலஸ்தீனத்தின் ‘நில தினம்’ (Land Day) மற்றும் ‘பாலஸ்தீன கைதிகள் தினம்’ ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தனர்.
1936-களில் பிரிட்டிஷ் காலனித்துவத்திற்கும், நில ஆக்கிரமிப்பிற்கும் எதிராக பாலஸ்தீன மக்கள் நடத்திய ஆரம்பகால போராட்டங்களை இத்திரைப்படம் பதிவு செய்துள்ளது.
நிலம், கண்ணியம் மற்றும் சுதந்திரத்திற்காக தென்னாப்பிரிக்கா மேற்கொண்ட நீண்டகால போராட்டத்திற்கும், பாலஸ்தீனத்தின் தற்போதைய சூழலுக்கும் இடையிலான ஒற்றுமையை இந்தத் திரைப்படம் மீண்டும் ஒருமுறை உலகிற்கு நினைவூட்டியுள்ளது.
இந்தத் திரையிடல் நிகழ்வானது, நீதிக்கான போராட்டம் என்பது ஒரு குறிப்பிட்ட இனத்திற்கு மட்டும் சொந்தமானதல்ல என்பதை உரக்கச் சொன்னது.
“மனிதாபிமானம் மற்றும் கண்ணியம் ஆகியவற்றின் அடிப்படையில் பல்வேறு காலக்கட்டங்களில், வெவ்வேறு இடங்களில் நடக்கும் போராட்டங்கள் அனைத்தும் ஒன்றுக்கொன்று பிணைக்கப்பட்டவை” என்ற செய்தியை இந்த நிகழ்வு அழுத்தமாகப் பதிவு செய்தது.

