இலங்கையில் ஐந்தாவது பொதுவான புற்றுநோயான கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைக் கண்டறிவதற்கும், அது தொடர்பான சிகிச்சை களை வினைத்திறனுடன் முன்னெடுப்பதற்கும் 12 அதிநவீன கோல்போஸ்கோபி (Colposcopy) இயந்திரங்கள் இந்த ஆண்டு ஏற்கனவே வைத்தியசாலையில் இணைக்கப்பட்டுள்ளன. மேலும் 06 இயந்திரங்களை அடுத்த மாதம் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த இயந்திரம் ஒன்றின் பெறுமதி 60 இலட்சம் ரூபா எனவும், இதற்காக 72 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான தொகை சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளது.
அனுராதபுரம், பதுளை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், குருநாகல், தி சொய்சா மகளிர் வைத்தியசாலை, கண்டி, கம்பஹா, மாத்தறை வைத்தியசாலை, மொனராகலை, புத்தளம் மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள பொது வைத்தியசாலைகளிலும் இதே இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன.
எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் அம்பாறை, ராகம, களுத்துறை, குளியாப்பிட்டிய, மாத்தளை மற்றும் வவுனியா ஆகிய போதனா மற்றும் மாவட்ட வைத்தியசாலைகளில் மேலும் 06 கொல்போஸ்கோபி (Colposcopy) இயந்திரங்களை நிறுவ சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு திட்டமிட்டுள்ளது. அந்த இயந்திரங்களுக்காக 42 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
கடந்த காலத்தில் 15 கோல்போஸ்கோபி (Colposcopy) இயந்திரங்கள் மட்டுமே இயங்கி வந்த நிலையில், அவற்றில் பழமையான ஐந்து இயந்திரங்களுக்கு பதிலாக ஐந்து புதிய இயந்திரங்கள் மாற்றப்பட்டுள்ளன.
கோல்போஸ்கோபி என்பது கருப்பை வாய் மற்றும் பிறப்புறுப்பில் உள்ள அசாதாரணங்களை கண்டறிய பயன்படுத்தப்படும் ஒரு மருத்துவ முறையாகும்.
கோல்போஸ்கோப் எனப்படும் ஒரு சிறப்பு உருப்பெருக்கி சாதனம் கர்ப்பப்பை வாய் திசுக்களை தெளிவாக ஆராய உதவுகிறது, மேலும் இந்த அதிநவீன இயந்திரம் அசாதாரண செல்களைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்க மருத்துவர்களுக்கு உதவுகிறது.
மகப்பேறியல் மற்றும் மகப்பேறு மருத்துவர்கள் மற்றும் மகளிர் மருத்துவ புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர்கள் இந்த இயந்திரங்களைப் பயன்படுத்தி பெண்களுக்கு கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் உள்ளிட்ட அசாதாரணங்களைக் கண்டறிவதற்கான சிகிச்சைகளுக்கு பயன்படுத்துகின்றனர்.
புற்று நோய்க்கு முந்தைய நிலையில் கண்டறிவதன் மூலம் தடுக்கக்கூடிய புற்று நோய் இது என்றும், இது மனித பாப்பிலோமா வைரஸால் (Human Papilloma Virus) பரவும் நோய் என்றும் தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டம் சுட்டிக்காட்டுகிறது.
தற்போது, ஆண்டுக்கு சராசரியாக சுமார் 1200 புதிய நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். மற்றும் தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் தரவுகளின் படி முறையான சிகிச்சை எடுக்காததால் ஆண்டுக்கு சுமார் 180 நோயாளிகள் இறக்கின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டது.

