தேசிய நல்லிணக்கப் பணியில் தர்மசக்தி பவுண்டேஷன்: பௌத்த இளைஞர் சங்கமும் தென்கொரியாவின் சர்வமத தூதுக்குழுவும் கலந்துகொண்ட உயர்மட்ட கலந்துரையாடல்.

Date:

தற்போது இலங்கைக்கு வருகை தந்துள்ள தென்கொரிய சமாதான அமைப்பின் சர்வ மத தலைவர்கள் நேற்று மாலை பொரலையில் அமைந்துள்ள (YMBA) பௌத்த இளைஞர் சங்க தலைமை காரியாலயத்தில், பௌத்த இளைஞர் அமைப்பின் உயர் பீட உறுப்பினர்களை சந்தித்தனர்.

இதன்போது இருசாராருக்கும் இடையிலான உயர்மட்ட கலந்துரையாடல் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் கொழும்பு தர்மசக்தி பவுண்டேஷனின் நிர்வாக உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

தர்மசக்தி பவுண்டேஷனின் தலைவர் மரியாதைக்குரிய மாதம்பாகம அஸ்ஸஜி தேரர், அவர்களைத் தலைவராகக் கொண்ட இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில், கொரியாவிலும் இலங்கையிலும் எவ்வாறான சமய நல்லிணக்கப் பணிகள் இடம்பெறுகின்றன என்பது குறித்து கலந்துரையாடப்பட்டதோடு விசேடமாக பௌத்த இளைஞர் சங்கம் (YMBA) கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நாட்டில் செய்து வருகின்ற பரவலான பணிகள் குறித்த கலந்துரையாடலாகவும் இடம்பெற்றது.

இந்த நாட்டில் மாறி மாறி வருகின்ற அரச தலைவர்களையும் உயர்மட்ட பௌத்த குரமார்களையும்  இணைத்துக்கொண்டு, எல்லா இனங்களையும் சேர்ந்த தலைவர்களையும் அரவணைத்த நிலையில் நீண்ட காலமாக இந்த அமைப்பு எவ்வாறான ஒரு அமைப்பாக செயல்படுகிறது, பௌத்த விழுமியங்களையும் பாதுகாத்துக் கொண்ட நிலையில் ஏனைய சமயங்களுடனும் இணக்கப்பாட்டோடு செயல்படுகிறது என்பதனையும் விளக்கப்படுத்தக்கூடிய வகையிலும் தேச முன்னேற்றத்தில் ஒரு சிவில் அமைப்பு எவ்வாறு செயல்பட முடியும் என்பதற்கான அனுபவரீதியான கருத்து பரிமாற்றமாகவும் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.

கல்வி, பொருளாதாரம், இளைஞர் வலுவூட்டல் உள்ளிட்ட பல் துறைகளில் YMBA அமைப்பு நாடு தழுவிய ரீதியிலே செய்கின்ற பல பாரிய பணிகள் குறித்த விளக்கமும் இக் கலந்துரையாடலின் போது முன்வைக்கப்பட்டது.

அத்தோடு தென் கொரியாவில் எவ்வாறான சமூகப் பணிகள், சமய நல்லிணக்கப் பணிகள் நடைபெறுகின்றன என்பது பற்றிய விளக்கங்களைக் கொண்டதாகவும் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.

தென் கொரியாவில் உள்ள  பௌத்தர்கள், அதேபோன்று கிறிஸ்தவர்கள், அங்கு மிகச் சிறுபான்மையாக இருக்கின்ற முஸ்லிம்கள், இந்துக்கள் போன்றவர்களுடைய நிலைமைகள் பற்றியும் அவர்கள் மத்தியிலான உறவுகள் குறித்தும் பலசமயத்தவர்களுக்கும் கொரியாவில் காணப்படுகின்ற வாய்ப்புக்கள் குறித்தும் மிகச் சிறப்பான தகவல்கள் இக்கலந்துரையாடலின் போது கொரிய தூதுக்குழுவினரால் பரிமாறப்பட்டன.

பௌத்த இளைஞர் அமைப்பின் தேசியப் பொதுச் செயலாளர் பிரசன்ன அபேகோன் இந்த அமர்வுக்குத் தலைமை வகித்தார்.

அத்துடன் அமைப்பின் சார்பில் அதன் பொருளாளர் ரஞ்சன் டி சில்வா, நிர்வாகச் சபை உறுப்பினர் கலாநிதி குலதுங்க ராஜபக்ச, மற்றொரு நிர்வாக உறுப்பினர் முதித கருணாமுனி, மற்றுமொரு அதிகாரியான கஸ்ஸப ஜி போல் ஆகியோரும் YMBA அமைப்பின் சார்பில் கலந்துகொண்டதோடு, தர்மசக்தி பவுண்டேஷனின் தலைவர் மதிப்புக்குரிய கலாநிதி மாதம்பாகம அஸ்ஸஜி தேரர், அதன் ஆலோசனைச் சபை உறுப்பினர் சங்கைக்குரிய கித்தலகம ஹேமசார தேரர் ஓய்வுபெற்ற பிஷப் கௌரவ ஆசிரி பெரேரா, தர்மசக்தி அமைப்பின் செயலாளர் கௌரவ அனுர பெரேரா, அதன் பொருளாளர் பிர்தௌஸ் மௌலவி, நிர்வாக உறுப்பினர் அஷ்ஷைக் அப்துல் முஜீப் அஷ்ஷைக் எஸ்.எல் மதனி ஆகியோரும் இக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

நிகழ்வின் முடிவில் கேள்வி பதில்,மிக பயனுள்ளதாகவும் சுவாரஷ்யமான முறையிலும்  இடம்பெற்றன.

கொரியாவின் மதத் தலைவர்கள் YMBA  முக்கியஸ்தர்களுக்கும்,  தர்மசக்தி அமைப்பின் உறுப்பினர்களுக்கும் தங்களுடைய நினைவுப் பரிசுகளை வழங்கி கௌரவித்ததோடு, YMBA இன் சார்பிலும் கொரிய மதத் தலைவர்களுக்கான,  நினைவுச் சின்னம் செயலாளரினால் வழங்கி வைக்கப்பட்டது.

தற்போது இலங்கை வந்துள்ள தென்கொரியாவின் சமாதான அமைப்பின் சர்வ மத தலைவர்களுக்கு நேற்று நண்பகலில் தெஹிவளை முகியத்தீன் ஜும்ஆ பள்ளிவாசலில் வரவேற்பளிக்கப்பட்டதுடன் பகல் போஷணமும் ஏற்பாடு செய்யப்பட்டது.

அதேவேளை அவர்கள் இன்று கண்டியிலுள்ள பிரதான பௌத்த தலைவர்களைச், சந்திக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோடு யாழ்ப்பாணத்திலுள்ள இந்து மதத் தலைவர்களையும், கிறிஸ்தவ மதத்தின் தலைமைப் பீடமான பேராயர் கர்தினால் அவர்களையும் சந்திப்பதற்கான ஏற்பாடுகள், செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

இந்த ஆண்டில் 55,406 டெங்கு தொற்றாளர்கள் அடையாளம்; 32 பேர் உயிரிழப்பு!

இலங்கையில் 2026 ஆம் ஆண்டில் இதுவரை பதிவாகியுள்ள டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை...

சுரேஷ் சலே தனது உண்ணாவிரதத்தை கைவிட முடிவு!

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் பேரில் குற்றப் புலனாய்வுத்...

இலங்கையின் மீட்பு மற்றும் மறுசீரமைப்புப் பணிகளுக்காக, ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 200 மில்லியன் அமெரிக்க டொலர்

‘தித்வா’ சூறாவளியைத் தொடர்ந்து இலங்கையின் மீட்பு மற்றும் மறுசீரமைப்புப் பணிகளுக்காக, ஆசிய...

பெரும்பாலான பிரதேசங்களுக்கு மழைக்கான வாய்ப்பு

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...