2020ம் ஆண்டில் உலகில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட நாடுகளில் முதல் நான்கு இடங்களிலும் மத்திய கிழக்கு நாடுகளே உள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபை விடுத்துள்ள புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான், எகிப்து, ஈராக், சவூதி அரேபியா ஆகிய நாடுகளே மரண தண்டனை நிறைவேற்றுவதில் முன்னணியில் உள்ள நாடுகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. கடந்த ஆண்டில் நிறைவேற்றப்பட்ட 483 மரண தண்டனைகளில் 88 வீதமான மரண தண்டனைகள் இந்த நாடுகளில் தான் நிறைவேற்றப்பட்டுள்ளன. மனித உரிமை குழுக்களை மேற்கோள் காட்டி சர்வதேச மன்னிப்புச் சபை இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளது.
உலக நாடுகள் ஆள்கொல்லி வைரஸில் இருந்து மக்களைப் பாதுகாக்கப் போராடி வந்த ஒரு கால கட்டத்தில் இந்த நாடுகள் மரண தண்டனையை நிறைவேற்றி வந்துள்ளமை கவலைக்குரியது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இதே காலப்பகுதியில் சீனாவில் உய்குர் இன முஸ்லிம்கள் மீதும் ஏனைய அரச அதிருப்தியாளர்கள் மீதும் அடக்குமுறைகள் பிரயோகிக்கப்பட்டு பல உயிர்கள் காவு கொள்ளப்பட்டுள்ளன. சட்ட விரோத மரண தண்டனைகள் பல நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால் அது பற்றி சர்வதேச மன்னிப்புச் சபை அறிக்கையில் ஒரு வார்த்தைக் கூடக் குறிப்பிடப்படாமை அவதானிக்கத்தக்கதாகும்.
சீனா வருடாந்தம் பெருமளவான மரண தண்டனைகளை நிறைவேற்றி வருகின்றது. வட கொரியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளிலும் இது நடக்கின்றது. ஆனால் அவை தொடர்பான எந்தத் தரவுகளும் வெளியிடப்படுவதில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.