இலங்கையில் வழங்குவதற்கு தேவையான இரண்டாவது சொட்டு covid-19 தடுப்பூசி மருந்தை இந்தியாவிடமிருந்து பெற்றுக் கொள்வது தற்போதைக்கு சாத்தியமற்றது என்ற முடிவுக்கு வந்துள்ள அரசாங்கம் அது தொடர்பாக ஏனைய நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது.
முதலாவது சுற்றில் வழங்கப்பட்ட ஆக்ஸ்போர்ட் அஸ்ட்ரா செனிக்கா தடுப்பு மருந்தை இந்தியாவிடமிருந்து பெற்றுக்கொள்ள முடியாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.இதனால் அமெரிக்கா அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிடமிருந்து இந்த மருந்தை பெற்றுக் கொள்ளும் வகையில் அந்த நாடுகளுடனான அவசர பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக ஜனாதிபதியின் ஆலோசகரும் கொவிட் தடுப்புமருந்து செயலணியின் தலைவருமான லலித் வீரதுங்கவை மேற்கோள்காட்டி இன்றைய ஆங்கில வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியாவிடமிருந்து அஸ்ட்ரா செனிக்கா
தடுப்பு மருந்தை பெற்றுக்கொள்வது இப்போதைக்கு சாத்தியமற்றது என்று தெரிகின்றது. காரணம் இந்தியாவுக்கே இப்போது பெருமளவு மருந்து தேவைப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இலங்கையில் ஏற்கனவே திட்டமிட்டபடி இரண்டாவது சொட்டு மருந்தை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளில் அரசாங்கம் தீவிர கவனம் செலுத்தி வருகின்றது. அந்த வகையில் இதே வகை மருந்தை வேறு நாடுகளிடம் இருந்து பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகளில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம் என்று லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் முதலாவது சொட்டுக்கும் இரண்டாவது சொட்டுக்கும் இடையில் சுமார் 16 வார கால அவகாசம் எடுத்துக் கொள்ள முடியும் என்பதால் குறிப்பிட்ட காலப்பகுதியில் மருந்தை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்தியா அடுத்தகட்டமாக ஒரு மில்லியன் சொட்டு மருந்தை வழங்குவதற்கு உடன்பட்டு இருந்தது. ஆனால் அது இப்போது சாத்தியமற்ற ஒன்றாக மாறியுள்ளது. இருப்பினும் இந்த ஒப்பந்தத்தை ஏற்று இந்திய செரம் நிறுவனம் தனது பங்களிப்பை உரிய நேரத்தில் வழங்கும் என்று தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் லலித் வீரதுங்க நம்பிக்கை தெரிவித்துள்ளார்.