இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பலஸ்தீனத்தின் மேற்குக்கரை பிரதேசத்தில் உள்ள நப்லுஸ் கிராமத்தில் நேற்று இரவு 16வயது இளைஞர் ஒருவரை இஸ்ரேலிய படைகள் மூர்க்கத்தனமாக சுட்டுக் கொன்றுள்ளனர்.
கிராமத்துக்கு அருகில் உள்ள வீதி வழியாக இந்த சிறுவன் சென்றுகொண்டிருந்தபோது அங்கு மரம் ஒன்றின் கீழ் மறைந்திருந்த இஸ்ரேலிய படைவீரர்கள் அந்த சிறுவனின் பின்புறமாக சுட்டுள்ளனர். இரண்டு துப்பாக்கி ரவைகள் அவனுடைய பின்புறத்தை தாக்கிய நிலையில் செயிட் ஒபைத் என்ற அந்த சிறுவன் கீழே விழுந்துள்ளான்.

இந்த சம்பவம் கேள்வியுற்று அவனை காப்பாற்றுவதற்கு அம்புலன்ஸ் வண்டி ஒன்று சென்றபோது அதை குறிப்பிட்ட இடத்துக்கு செல்லவிடாமல் சுமார் 15க்கும் அதிகமான நிமிடங்கள் இஸ்ரேலிய படைகள் தடுத்து வைத்துள்ளனர். அதன் பின்னரே அந்த சிறுவன் அங்கிருந்து ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு நப்லுஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளான்.
பலஸ்தீன சிறுவர்களை அதுவும் நிராயுதபாணியான சிறுவர்களை இஸ்ரேலிய படைகள் தொடர்ந்து இந்த பிரதேசங்களில் இவ்வாறு கொலை செய்து வருகின்றமை மிகவும் கண்டிக்கத்தக்கது என்று சிறுவர்களுக்கான பலஸ்தீன பாதுகாப்பு பிரிவு கவலை தெரிவித்துள்ளது .