கடும் நிதிநெருக்கடியில் உள்ள பாகிஸ்தானுக்கு 8 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி அளிக்க சவுதி அரேபியா அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இதனை இறுதி செய்வதற்காக பாகிஸ்தான் நிதியமைச்சர் சவூதி அரேபியாவில் தங்கியுள்ளார்.
பாகிஸ்தானிலும் கடுமையான நிதி நெருக்கடி நிலவி வருகிறது. அந்நிய செலாவணி கையிருப்பு இல்லாததாலும், கடுமையான விலை உயர்வாலும் இலங்கையைப் போல பாகிஸ்தான் பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது.
இந்த பொருளாதார நெருக்கடி காரணமாகவே இம்ரான் கான் அரசு பதவி விலக வேண்டும் என எதிர்ப்பு எழுந்தது.
இதனையடுத்து பாகிஸ்தானில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்ததுடன் புதிய பிரதமராக ஷாபாஸ் ஷெரீப் பதவியேற்றுள்ளார்.
ஆனாலும் பொருளாதார நெருக்கடி பெரும் சிக்கலாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில், பாகிஸ்தானின் ரூபாய் மதிப்பு ஒரு டொலருக்கு 185 ரூபாய் என்ற அளவுக்கு சரிந்திருக்கிறது.
பாகிஸ்தானில் நிலக்கரி வாங்க அந்நியச் செலாவணி கையிருப்பு இல்லாததால் கடுமையான மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டு மின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சி முடங்கியுள்ளது.
இந்த நிலையில் பாகிஸ்தானின் பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் முதன்முறையாக சவூதி அரேபியாவுக்கு சென்றார்.
அங்கு அந்த நாட்டின் தலைவர்களை நேரில் சந்தித்து பேசிய ஷெபாஸ் ஷெரீப் பாகிஸ்தானின் பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வுகாணுவதற்கு உதவி செய்யும்படி கோரிக்கை வைத்தார்.
பாகிஸ்தானுக்கு 8 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி அளிக்கவும், பாகிஸ்தானுக்கான எண்ணெய் நிதியை 1.2 பில்லியன் அமெரிக்க டொலர்களில் இருந்து 2.4 பில்லியன் டொலர்களாக இரட்டிப்பாக்க பாகிஸ்தான் கேட்டுக் கொண்டது. அதனையும் செய்வதாக சவூதி அரேபியா ஒப்புக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.