இந்தியாவில் உள்ள முக்கிய இஸ்லாமிய குழுக்கள் மற்றும் மசூதிகளின் தலைவர்கள், ஆளும் மத்தியஅரசின் பாரதிய ஜனதா கட்சியின் இரு உறுப்பினர்களால் முகமது நபியைப் பற்றி இழிவான கருத்துக்களுக்கு எதிரான போராட்டங்களுக்கான திட்டங்களை நிறுத்துமாறு சக முஸ்லிம்களிடம் திங்களன்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கடந்த வாரம் இரண்டு முஸ்லிம் இளைஞர்கள் கொல்லப்பட்டதற்கும், காவல்துறை உட்பட 30க்கும் மேற்பட்டோர் காயங்களுக்கும் வழிவகுத்த ஆர்ப்பாட்டங்கள் வன்முறையாக மாறியதை அடுத்து, பெரிய கூட்டங்களைத் தவிர்ப்பதற்கான செய்தி பரப்பப்பட்டது.
இந்நிலையில், ‘யாராவது இஸ்லாத்தை இழிவுபடுத்தும் போது ஒன்றாக நிற்பது ஒவ்வொரு முஸ்லிமின் கடமையாகும், ஆனால் அதே நேரத்தில் அமைதியைப் பேணுவது முக்கியம்’ என்று பல நாடுகளில் செயல்படும் ஜமாத்-இ-இஸ்லாமி ஹிந்தின் மூத்த உறுப்பினர் மாலிக் அஸ்லம் சர்வதேச ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார்.
மேலும், மே மாத இறுதியில் மற்றும் இந்த மாத தொடக்கத்தில், பிரதமர் நரேந்திர மோடியின் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த செய்தித் தொடர்பாளர்கள் இருவர் முஸ்லிம்களைப் புண்படுத்தும் வகையில் ஒரு தொலைக்காட்சி விவாதத்திலும் சமூக ஊடகங்களிலும் கருத்துக்களை வெளியிட்டனர்.
இதேவேளை, இந்த சர்ச்சைக்கருத்துக்களால், பல மாநிலங்களில் அமைதியின்மையின் போது கலவரம் செய்ததாக சந்தேகிக்கப்படும் 400 பேரைக் கைது செய்துள்ளதாகவும், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும், சில இடங்களில் இணையச் சேவைகள் நிறுத்தப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கலவரத்தைத் தூண்டியதாக உத்தரப்பிரதேசத்தில் சில முஸ்லிம் பிரமுகர்கள் சட்டவிரோதமாக எழுப்பியிருந்த கட்டடங்களை போலீஸார் பாதுகாப்புடன் அதிகாரிகள் இடித்துத் தள்ளினர்.
மேலும் இந்த நடவடிக்கைக்கு முஸ்லிம் மக்களிடையே கண்டனங்கள் எழுந்துள்ளது. உரிமைக்காகப் போராடும் முஸ்லிம்களைக் குறிவைத்து அவர்களது வீடுகளை அரசு அதிகாரிகள் இடித்துத் தரைமட்டமாக்குவதாகக் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
வெளிநாடுகளில் கண்டனங்கள் வலுத்தாலும், இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக்கள் குறித்து மோடி கருத்து தெரிவிக்கவில்லை. கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன் மற்றும் ஈரான் உள்ளிட்ட நாடுகள் – இந்தியாவின் அனைத்து முக்கிய வர்த்தக பங்காளிகள் – இராஜதந்திர எதிர்ப்புகளை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.