உலகளாவிய தொழில் சந்தையை இலக்காகக் கொண்டு இலங்கை தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு இலவச தொழிற்பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.
இன்று (20) காலை அமைச்சில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் கீழ் உள்ள ‘ஷ்ரம வாசனா’ நிதியத்தின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இந்த வேலைத்திட்டத்தின் கீழ் தொழிற் பயிற்சிகளை வழங்குவதற்கான செலவை ‘ஷ்ரம வாசனா’ நிதியத்தினால் ஏற்க வேண்டும் எனவும் அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், ‘ஷ்ரம வாசனா’ நிதியத்தின் முன்னேற்றம் மற்றும் எதிர்கால வேலைத்திட்டங்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த சந்திப்பில் உழைக்கும் மக்களின் நலன் குறித்து அமைச்சர் மனுஷ நாணயக்கார விசேட கவனம் செலுத்தினார்.
இதேவேளை, தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண அமைச்சின் தலையீட்டுடன் சுதந்திர வர்த்தக வலயங்களை மையமாகக் கொண்டு தொடர் நடமாடும் சேவைகளை நடைமுறைப்படுத்துமாறு அமைச்சர் அதிகாரிகளுக்கு மேலும் பணிப்புரை விடுத்தார்.