சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக நடைபெற்ற பல சுற்றுப் பேச்சுக்களின் போது ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் முன்வைத்த யோசனைகளை வரும் திங்கட்கிழமை (08) இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்ட அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக நேற்று (05) பாராளுமன்றத்தில் உள்ள 11 சுயேச்சைக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் 43 ஆவது படையணியின் தலைவர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஜே.வி.பி, தேசிய மக்கள் சக்தி மற்றும் இன்னும் சில தமிழ் அரசியல் கட்சிகள் மாத்திரமே பேச்சுவார்த்தை நடத்த எஞ்சியுள்ளது என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் வகையில் அரசியல் சித்தாந்தங்களை ஒதுக்கி வைத்துவிட்டு சர்வகட்சி ஆட்சியில் ஈடுபடுவதற்கு அனைவரினதும் ஆர்வத்தை பாராட்டினார்.
அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தை மீளக் கொண்டுவருவது தொடர்பில் ஜனாதிபதியின் நிலைப்பாட்டில் 43ஆவது படையணி நம்பிக்கையுடன் செயற்படுவதாக 43ஆவது படையணியின் தலைவர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
மேலும், அரசியல் கட்சி அமைப்பை இல்லாதொழித்து அரச நிறுவனங்களின் தலைவர்களாக நிபுணத்துவம் பெற்றவர்களை நியமிப்பதற்கான வலுவான தேவை இருப்பதாகவும் அவர் கூறினார்.
அரசியல் சீர்திருத்தங்களினால் மாத்திரம் ஒரு நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது என தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க, தொழில் வல்லுனர்களின் பங்களிப்பு முக்கிய காரணியாக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
கல்வி சீர்திருத்தங்களில், எதிர்கால உலகத்தைப் பார்த்து பாடத்திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
நாட்டை கட்டியெழுப்புவதற்கான பொதுவான வேலைத்திட்டத்தை தயாரிப்பதன் மூலம் படிப்படியாக முன்னேற முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார கருத்து தெரிவித்துள்ளார்.
அதேநேரம், சர்வகட்சி ஆட்சி அமைப்பது தொடர்பில் தற்போது இடம்பெறும் கலந்துரையாடல்களில் சகல அரசியல் கட்சிகளின் அடையாளமும் பாதுகாக்கப்பட வேண்டுமென சுட்டிக்காட்டிய நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, அடித்தள ஆவணத்துடன் கலந்துரையாடலை முன்னெடுப்பதே வெற்றியடைய உதவும் எனவும் தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் சர்வகட்சி அரசாங்கத்திற்கான பொதுவான வேலைத்திட்டம் தொடர்பில் தமது குழு கலந்துரையாடியதாக நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் முஸம்மில் தெரிவித்துள்ளார்.
அரசியல் கட்சி கொள்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்றாலும் பொதுவான ஒருமித்த கருத்து தேவை என்றும் அவர் கூறினார்.
பிரதமர் தினேஷ் குணவர்தன, பாராளுமன்ற உறுப்பினர்களான பேராசிரியர் திஸ்ஸ விதாரண, அசங்க நவரத்ன, பிரேமநாத் சி.தொலவத்த, கரு பரணவிதான, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் சட்டத்தரணி சமிந்த குலரத்ன ஆகியோர் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.
இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் சர்வகட்சி ஆட்சியமைப்பதற்காகவே பதவி விலகியுள்ளதாக முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.