நிராயுதபாணியான அமைதியான பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்ட பேரணியை தாக்கி கலைக்க ஆயிரக்கணக்கான ஆயுதம் தாங்கிய பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் ஈடுபடுத்தப்பட்டமை ஒரு நாட்டில் ஜனநாயகத்தின் தோல்விக்கு சிறந்த உதாரணம் என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தினால் நேற்றைய தினம் (18) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த எதிர்ப்பு ஊர்வலம் தொடர்பில் அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தனது முகநூல் கணக்கில் பதிவிட்டுள்ளார்.
மே 9 அன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அமைதியான அஹிம்சைப் போராட்டத்தை இவ்வாறு ஒரு கும்பலைப் பயன்படுத்தி தாக்கினார்.
இன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் ஆயுதமேந்திய பொலிஸ் மற்றும் இராணுவப் பிரிவுகளை களமிறக்குகின்றார்.
மே 9 தாக்குதலுக்குப் பிறகு என்ன நடந்தது என்பதை நாடே பார்த்தது. இது வீதியை வெட்டுவது, இன்னும் தீவிரமான மக்கள் எழுச்சிக்கு தேவையான இடத்தை உருவாக்குவது என்பதை திறமையற்ற, மக்கள் விரோத ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
மக்கள் மத்தியில் இருந்து எழும் எதிர்ப்புகளை அடக்குவதற்கு காவல்துறையையும், இராணுவத்தையும் பயன்படுத்துவதை ஜனநாயக உலகம் ஒரு போதும் அங்கீகரிக்காது.
சர்வதேச ஆதரவு இன்றியமையாத ஒரு நேரத்தில், இது போன்ற தேவையற்ற அடக்குமுறை எதிர்வினைகளின் விளைவு சந்தேகத்திற்கு இடமின்றி முழு நாட்டையும் பாதிக்கும்.
நேற்றைய ஆர்ப்பாட்டத்தின் போது, பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவையின் அழைப்பாளர் வசந்த முதலிகே உட்பட 12 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தக் குழுவில் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான பிக்குகள் சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் சில பிக்குகளும் இருந்ததாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
போராட்டம் கலைந்த போது நடிகர் ஜெஹான் அப்புஹாமி மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட 5 பேரை கைது செய்து பின்னர் ஜெஹான் அப்புஹாமியை விடுவிக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர்.