சர்வதேச இஸ்லாமிய அறிஞர்கள் ஒன்றியத்தின் இடைக்காலத் தலைவராக இந்தோனேஷியாவைச் சேர்ந்த ஹபீப் ஸாலிம் ஸக்காப் அல் ஜாபரி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
சர்ச்சைக்குரிய மேற்கு சஹாரா பிராந்தியம் தொடர்பில் எழுந்த முரண்பாடுகளை அடுத்து ஒன்றியத்தின் தலைவர் அஹ்மத் ரைஸூனி கடந்த மாதம் பதவி விலகியிருந்த நிலையில் ஜனவரியில் நடைபெறவுள்ள தலைவர் தேர்வு வரையிலான காலப்பகுதிக்கு ஜாபரி நியமிக்கப்பட்டுள்ளார்.
மொரிடானியாவும் மொரோக்கோவின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என தொலைக்காட்சி நேர்காணலொன்றில் ரைஸூனி தெரிவித்த கருத்து சர்ச்சையைக் கிளப்பியதையடுத்து அவர் பதவி விலகினார். இடைக்காலத் தலைமைப் பதவியை ஏற்றுள்ள ஜாபரி ஷரீஆத் துறையில் கலாநிதிப் பட்டம் பெற்றவராவார்.
இந்தோனேஷியப் பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளராகக் கடமையாற்றிய இவர் இந்தோனேஷிய அரசாங்கத்தில் சமூக விவகாரங்களுக்கான அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.