மாகொல முஸ்லிம் ஆதரவற்ற பராமரிப்பு நிலையத்தின் சொத்துக்கள், தனி நபர்களுக்கு வழங்க முயற்சிக்கப்படுவதாக கூறி, மள்வானையில் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று (6) முன்னெடுக்கப்பட்டது.
மள்வானை அல் முபாரக் தேசிய பாடசாலைக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் பேரணியாக, கராபுகஸ் சந்தி ஊடாக உலஹிட்டிவலவில் அமைந்துள்ள , மாகொல முஸ்லிம் அநாதைகள் நிலையத்தின் மள்வானை கிளை வரை சென்றது.
குறித்த ஆதரவற்ற நிலையத்தில் கல்வி கற்ற பழைய மாணவர்கள் இந்த ஆர்ப்பாட்டை ஏற்பாடுச் செய்திருந்தனர்.
‘ இலங்கை முஸ்லிம் அநாதைகளின் எதிர்க்காலத்தை வளமாக்குவோம்’ எனும் தொனிப் பொருளின் கீழ் இவ்வார்ப்பாட்டம் இடம்பெற்றதுடன், குறித்த நிலையத்தின் தற்போதைய நிர்வாக சபை, நிலையத்தின் சொத்துக்களை விற்பனை செய்து, அந் நிலையத்தை அழிவுப் பாதைக்கு இட்டு செல்வதாக பழைய மாணவர்களால் குற்றம் சுமத்தப்பட்டது.
நிர்வாக சபைக்கு எதிராக பல்வேறு பதாதைகளை ஏந்தி இவ்வார்ப்பாட்டம் நடாத்தப்பட்டதுடன் , தொம்பே மற்றும் பியகம பொலிசாரினால் ஆர்ப்பாட்டத்துக்கு பாதுகாப்பளிக்கப்பட்டது.
இந் நிலையில், மாகொல முஸ்லிம் அநாதைகள் நிலையத்தின் நிர்வாக சபையை பதவி விலகுமாறு வலியுறுத்தியும், புதிய நிர்வாக சபை ஒன்றினை தெரிவு செய்வதற்கான சூழலை ஏற்படுத்துமாறு கோரியும், இதன்போது மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.