கடந்த ஆண்டு இடம்பெற்ற பாரிய போராட்டத்தின்போது ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 20 மில்லியன் ரூபா பணத்தை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கொடுக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே (8) ஆம் திகதி நிராகரித்தார்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற பாரிய போராட்டத்தின் போது அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களால் கண்டுபிடிக்கப்பட்ட பணத்தை ஒப்படைக்குமாறு முன்னாள் ஜனாதிபதியின் சட்டத்தரணி நீதவானிடம் கோரியிருந்தார்.
இந்த கோரிக்கையை நிராகரித்த கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே, உத்தரவு பிறப்பிப்பதற்கு முன்னர் பணத்தின் அளவு குறித்து விசாரணை நடத்துவது நீதிமன்றத்தின் பொறுப்பாகும் என்று கூறினார்.
பணமோசடி தடுப்புச் சட்டம் மற்றும் இலஞ்ச ஒழிப்புச் சட்டத்தின் கீழ் இந்த தொகையை விசாரிக்க வேண்டும் என்றும், அதனால் அதை விடுவிக்க முடியாது என்றும் அவர் மேலும் கூறினார்.
விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில் பணத்தை விடுவிக்க முடியாது எனவும் வேறு எவரும் பணத்திற்காக உரிமை கோரவில்லை எனவும் நீதவான் மேலும் தெரிவித்தார்.
ஜூலை 2022 இல் பாரிய ஆர்ப்பாட்டங்களின் போது பல அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் கோட்டையில் உள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்குள் நுழைந்து சுமார் 17.5 மில்லியன் பணத்தைக் கண்டுபிடித்தனர்.
பின்னர் போராட்டக்காரர்கள் பணத்தை எண்ணி கோட்டை பொலிஸ் நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) கூறப்பட்ட பணத்தின் அளவு குறித்து ஆராய்ந்து வருகிறது.