பங்களாதேஷ் இலங்கைக்கு வழங்கிய 200 மில்லியன் டொலர் கடனை திருப்பிச் செலுத்தும் காலத்தை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டித்துள்ளது.
முன்னதாக, இலங்கை மத்திய வங்கி இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 200 மில்லியன் டொலர் கடனின் முதல் தவணையை வழங்க பங்களாதேஷிடம் கால அவகாசம் கேட்டது, அதற்குள் தனது கடனை மறுசீரமைக்க முடியும் என்று நம்புகிறது.
ஆனால், மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. இப்போது, இலங்கை இன்னும் 6 மாத கால அவகாசம் கோருகிறது.
மேலும் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் அதன் முதல் தவணையையும் செப்டெம்பர் மாதத்திற்குள் மற்றொரு தவணையையும் வழங்குவதாக கூறியதாக பங்களாதேஷ் வங்கியின் ஆளுநர் அப்துர் ரூஃப் தாலுக்டர் தெரிவித்தார்.
வொஷிங்டனில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்கவுடனான சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் அவர் இதனைக் கூறியுள்ளார்.
வரலாற்றில் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் இலங்கை, 2021 மே மாதம் இந்த நிதியை கடனாகப் பெற்றது. கடன் திருப்பிச் செலுத்தும் காலம் மூன்று முறை நீட்டிக்கப்பட்டுள்ளது.