போக்குவரத்து அமைச்சருடன் அடுத்த வாரம் நடைபெறும் கலந்துரையாடலின் போது தீர்மானம் எட்டப்படாவிட்டால் ஒரு வார கால வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
எதிர்வரும் செவ்வாய்கிழமை நடைபெறவுள்ள அமைச்சருடனான கலந்துரையாடலின் போது திருப்திகரமான பதில் கிடைக்க வேண்டும் என சங்கத்தின் தலைவர் சுமேதா சோமரத்ன இன்று ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
“எங்கள் அடையாள வேலை நிறுத்தம் இன்று நள்ளிரவு 12.00 மணிக்கு முடிவுக்கு வந்தது. அமைச்சின் செயலாளர் தலையிட்டு தேவையான அறிவுரைகளை ரயில்வே பொது முகாமையாளருக்கு இப்போதாவது வழங்குவார் என நம்புகிறோம்,” என்றார்.
செவ்வாய்கிழமைக்கான உத்தியோகபூர்வ கலந்துரையாடல் ஒன்றை அமைச்சர் சங்கத்திற்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
கலந்துரையாடலின் போது தீர்வு வழங்கப்படாவிட்டால், நிலைய அதிபர்கள் காலவரையற்ற பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அவர் மேலும் எச்சரித்துள்ளார்.