கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி மாநிலம் முழுவதும் உள்ள 36 மையங்களில் சனிக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்றது.
இத்தேர்தலில் ஆளும் பாஜக 224, எதிர்க்கட்சியான காங்கிரஸ் 223 (ஒரு தொகுதி விவசாய சங்கம்), மதச்சார்பற்ற ஜனதா தளம் 207, ஆம் ஆத்மி 217, பகுஜன் சமாஜ் 133 தொகுதிகளில் போட்டியிட்டன. 918 சுயேச்சைகள் உட்பட மொத்தம் 2,613 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். காலை 10 மணி முதல் முன்னிலை விவரம் வெளியாகி 2 மணிக்குள் பெரும்பாலான முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
224 தொகுதிகள் கொண்ட கர்நாடகாவில் 113 தொகுதிகளில் அதிக அளவில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது.
பெரும்பான்மைக்குத் தேவையான 113 இடங்களுக்கு மேலாகவே காங்கிரஸ் நீண்ட நேரமாக முன்னிலையில் இருந்து வருகிறது. இதே நிலை தொடரும்பட்சத்தில் மஜத கட்சியின் ஆதரவின்றி கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியமைக்கும்.
நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு இடங்களில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள முடிவுகளின்படி காங்கிரஸ் 119 இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது.
மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி 29 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. சுயேச்சை உள்ளிட்ட மற்றவர்கள் 6 தொகுதிகளிலும் முன்னிலையில் இருந்து வருகின்றனர். பெரும்பான்மைக்குத் தேவையான 113 இடங்களுக்கும் அதிகமான தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது.
இதனால் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடிப்பது உறுதியாகிவிட்டது. கர்நாடகாவில் உள்ள 6 மண்டலங்களில் 5ல் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் வெற்றி பெறும் நிலையில் இருப்பதை அடுத்து ஞாயிற்றுக்கிழமை காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளது.
பெங்களூருவில் உள்ள ஹில்டன் ஹோட்டலில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அனைத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் பெங்களூரு வர காங்கிரஸ் தலைமை உத்தரவிட்டுள்ளது.
காங்கிரஸ் முன்னிலை வகிக்கும் நிலையில் பிரியங்கா காந்தி சிம்லாவில் உள்ள அனுமன் கோயிலில் வழிபாடு செய்தார். புதுதில்லி மற்றும் பெங்களூருவில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்கள்.