மத போதகர் ஜெரோம் பெர்னாண்டோ தனது சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்கு வீடியோ மூலம் மன்னிப்புக் கோரியிருந்தாலும் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதை தவிர்க்க முடியாது என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் கூறியுள்ளார் .
பௌத்தம், இஸ்லாம் மற்றும் இந்து மதத்திற்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டதாக போதகர் பெர்னாண்டோ கடந்த வாரம் நாட்டை விட்டு வெளியேறினார்.
“யாராவது குற்றம் செய்துவிட்டு மன்னிப்புக் கேட்டால் அவருக்கெதிராக விசாரணைகளை முன்னெடுக்காமல் இருக்க முடியாது.
இது கடந்த காலத்திலும் நடக்கவில்லை, எதிர்காலத்திலும் நடக்காது. இது குறிப்பிட்ட விடயத்திற்கு மாத்திரமல்ல எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நடைமுறையாகும்” என இன்று பொது பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் அலஸ் தெரிவித்தார்.
மேலும் போதகர் பெர்னாண்டோவுக்கு எதிரான விசாரணைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவர் மீது சிஐடிக்கு பல புகார்கள் வந்துள்ளன, தற்போது அனைத்து புகார்களையும் விசாரித்து வருகின்றனர். நீதிமன்றம் அவருக்கு பயண தடை விதித்தது.
எனவே அவர் நாடு திரும்பியதும், விமான நிலையத்தில் உள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படுவதே சாதாரண நடைமுறையாகும். அவர் வந்தவுடன் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தி வாக்குமூலங்களைப் பதிவு செய்வார்கள் என்றார்.
அப்போது அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவாரா அல்லது வீட்டுக்கு அனுப்பப்படுவாரா என்பதை சிஐடி மட்டுமே முடிவு செய்ய முடியும் என்றும் அமைச்சர் கூறினார்.