மணிப்பூர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 40 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக அம்மாநில முதலமைச்சர் பிரேன் சிங் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், சில வாரங்களுக்கு முன்பு இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் வன்முறை வெடித்தது.
இதனால் அம்மாநிலமே கலவர பூமியாக மாறியது. இந்த கலவரத்தில் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். வீடுகள், வழிபாட்டுத் தலங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.
நவீன ஆயுதங்களுடன் பொதுமக்களை தாக்குவது போன்ற அசம்பாவித செயல்களும் அரங்கேறின. இதனால் மாநிலம் முழுவதும் வன்முறையை கட்டுக்குள் கொண்டு வர துணை ராணுவப் படைகளை மத்திய அரசு அனுப்பி வைத்தது.
ஷேக்மாய், சுக்னு, கும்பி, பேயங், சேரவ் உள்ளிட்ட வெவ்வேறு இடங்களில் ஆயுதக் குழுக்களுக்கு எதிராக பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்தியதாகவும், மேலும் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
மணிப்பூர் சட்டம் ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ள அமித் ஷா மணிப்பூருக்கு இன்று பயணம் மேற்கொள்ள இருக்கும் நிலையில், இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
கடந்த ஒரு மாத காலமாக மணிப்பூரில் தொடர்ந்து வன்முறைகள் நீடித்து வருகின்றன. இதனால் இம்மாநிலத்தில் இணையசேவை முடக்கப்பட்டுள்ளது. மணிப்பூரில் மைத்தேயி இன மக்கள் அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர்.
இன்னொரு பக்கம், மைத்தேயி மக்கள் இல்லாத தனி நிர்வாக அமைப்பு அல்லது தனி மாநிலத்தை தங்களுக்கு உருவாக்கித் தர வேண்டும் என்கின்றனர் குக்கி இன மக்கள்.