IMF நிபந்தனைகளை செப்டெம்பர் மாதத்திற்கு முன்னர் இலங்கை விரைவில் நிறைவேற்றும்: ரஞ்சித்

Date:

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிபந்தனைகளை செப்டெம்பர் மாதத்திற்கு முன்னர் நிறைவேற்றுவதற்காக அரசாங்கமும் அதிகாரிகளும் இரவு பகலாக உழைத்து வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

ருவன்வெல்லவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே ரஞ்சித் சியம்பலாபிட்டிய இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் முன்னர் செய்து கொள்ளப்பட்ட 16 உடன்படிக்கைகளைப் போன்று அல்லாமல் அரசாங்கம் வெளிப்படைத்தன்மையுடன் செயற்படுவதாகவும், இம்முறை இந்த செயற்பாடுகள் தொடர்பில் பொதுமக்கள் நன்கு அறிந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

பாராளுமன்ற விவாதத்தின் போது உடன்படிக்கையின் ஒவ்வொரு சரத்து தொடர்பிலும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது கருத்துக்களை தெரிவிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எனவே சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்புக்கொள்ளப்பட்ட எந்தவொரு நிபந்தனைகளையும் அல்லது சரத்துகளையும் மறைக்கும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை.

புதிய மத்திய வங்கி சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் அங்கீகரிப்பது போன்ற பல முக்கிய நடவடிக்கைகள் அடுத்த வாரங்களில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் சியம்பலாபிட்டிய ஒப்புக்கொண்டார்.

சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தங்களின் செயல் திட்டத்தை செயற்படுத்துவதற்கான காலக்கெடுவை ஏற்பாடு செய்ய ஒரு விசேட குழு பணிபுரிகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

சில நிபந்தனைகளை நிறைவேற்ற மூன்று மாத கால அவகாசம் உள்ளதாகவும், கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளும் துரித கதியில் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தவும் நீண்ட கால அபிவிருத்தியை அடையவும் சில கடினமான மற்றும் செல்வாக்கற்ற முடிவுகள் எடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

எனவே இலக்குகளை அடைவதற்கு அனைத்து தரப்பினரின் ஆதரவும் தேவை என சியம்பலாபிட்டிய மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

நாட்டின் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை

இன்றையதினம் (12) நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா, மத்திய மாகாணங்களில்...

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...

சீன உதவியை விரிவாக்க கோரிக்கை: அமைச்சர் விஜித ஹேரத் சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.

தென்னாப்பிரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு சீனா திரும்பும் வழியில், இன்று காலை...

மசகு எண்ணெய் (Crude Oil): உலக பொருளாதாரத்தின் நாடித்துடிப்பு

Writer: Eng.S.M.M.Rifai சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இத்தலைப்பு, நமது பாடத்திட்டங்களில்...