ஹஜ் கடமைக்காக வந்திருந்த ஈரானிய யாத்திரிகர் (60) ஒருவர் கடுமையாகச் சுகவீனமுற்ற நிலையில் மக்காவில் உள்ள கிங் அப்துல்லா மெடிக்கல் சிட்டியின் ஹார்ட் ஹெல்த் சென்டரில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவருக்கு திறந்த இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஐந்து மணிநேரமாக மேற்கொள்ளப்பட்ட குறித்த அறுவைச்சிகிச்சை வெற்றிகரமாக அமைந்ததாகவும் நோயாளி மருத்துவர்களின் கண்காணிப்பில் குணமடைந்து வருவதாகவும் மீண்டும் தனது மத சடங்குகளை தொடர்வதற்குத் தயாராகி வருவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
புனித நகரத்திலும் ஏனைய புனிதத் தலங்களிலும் யாத்ரீகர்களுக்கு உதவவென 24 மணி நேரமும் அனைத்து மருத்துவ வசதிகளுடனும் ஊழியர்கள் முழுமையாக தயாராக உள்ளதாக சவூதி சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சேவைகளின் தரத்தைப் பேணுவதிலும் அனைத்து விவகாரங்களையும் கையாள்வதிலும் ஹஜ் காலத்தில் பல தசாப்தங்களாக பணியாற்றிய அனுபவங்களின் மூலம் பெற்ற நுட்பங்களை முன்னிறுத்துவதற்கு இது ஒரு வாய்ப்பாக அமைவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, கிங் அப்துல்லா மெடிக்கல் சிட்டியில் உள்ள ஹார்ட் ஹெல்த் சென்டர், அத்தகைய நடைமுறைகளைச் செய்வதில் மிகவும் தகுதி வாய்ந்த மற்றும் அனுபவம் வாய்ந்த ஊழியர்களை சேவையில் ஈடுபடுத்தியுள்ளதாகவும் சவூதி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.