75 வருட சுதந்திரம் மற்றும் இராஜதந்திர உறவை கொண்டாடும் வகையில் வெளிநாட்டு தூதுவர்கள் மலைநாட்டில் நட்புரீதியான சுற்றுப்பயணம் மேற்கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
புதுடில்லியில் இருந்து கடமையாற்றும் 09 வெளிநாட்டுத் தூதுவர்களுக்கென “எல்ல ஒடிஸி” விசேட நட்புறவு சுற்றுப்பயணமொன்று வெளிவிவகார அமைச்சு, ஜனாதிபதி செயலகம் மற்றும் இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் என்பவற்றினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அழகிய மலைநாட்டைக் கண்டுகளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தப் பயணம் ஜூலை முதலாம் திகதி முதல் 03ம் திகதி வரை மேற்கொள்ளப்பட்டது.
காலனித்துவ காலத்தை நினைவுகூரும் விசேட ரயிலான வைஸ்ரொயிஸ் விசேட ரயிலில் ( Viceroy Special ) தூதுக்குழுவினர் பயணம் செய்தனர்.
இராஜதந்திரக் குழுவினர் கண்டியில் இருந்து நுவரெலியா வரை குளிர் மலைப்பகுதிக்கு பயணித்ததோடு, இலங்கையின் அழகையும் விருந்தோம்பலையும் அனுபவித்தனர்.
மேலும், பேத்ரோ தேயிலை தோட்டத்தில் உலகப் புகழ்பெற்ற “சிலோன் டீ” தேநீரை தூதுவர் குழுவினர் சுவைத்துள்ளனர்.
இந்த விசேட சுற்றுப் பயணத்திற்கு வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் இலங்கை சுற்றுலா மேம்பாட்டுப் பணியகம் என்பன அனுசரணை வழங்கியிருந்தன.
இதேவேளை, சர்வதேச சமூகத்துடனான 75 ஆண்டுகால ஆக்கப்பூர்வமான ஈடுபாட்டை நினைவுகூரும் வகையில் இந்த மலைநாட்டு சுற்றுப்பயணம் அமைந்ததோடு, இலங்கையிலுள்ள பல்வேறு சுற்றுலாத் தலங்களின் மதிப்பு மற்றும் சுற்றுலாத் துறையை மேம்படுத்தவும் உதவுவதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

