பணி தடையை மீறி பிரேத பரிசோதனையை நடத்திய சட்ட வைத்திய அதிகாரி வைத்தியர் ருஹுல் ஹக் தொடர்பில் சுகாதார அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இலங்கை வைத்தியக் கட்டளைச் சட்டத்தின் அதிகாரங்களுக்கு இணங்க இலங்கை வைத்திய சபையின் பதிவு இலக்கம் 15168 இல் வைத்தியர் ருஹுல் ஹக் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி முதல் எட்டு மாத காலத்திற்கு வைத்திய நிபுணராக பணியாற்றுதல் சம்பளம் மற்றும் ஏனைய சலுகைகள் பெற்றுக்கொள்ளுதல் போன்றவை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை வைத்திய சபையின் நிபுணத்துவ நெறிமுறைக் குழுவினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தனக்கு விதிக்கப்பட்ட பணித்தடையை மீறியே பிரபல தொழிலதிபர் தினேஷ் ஷாஃப்டரின் மர்ம மரணம் மற்றும் ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிறுநீரகம் அகற்றப்பட்டு உயிரிழந்த குழந்தையின் மர்ம மரணம் தொடர்பில் வைத்தியர் ருஹுல் ஹக் பிரேத பரிசோதனை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், பணித்தடையை மீறி பிரேத பரிசோதனையை மேற்கொண்ட சட்ட வைத்திய அதிகாரி வைத்தியர் ரூஹுல் ஹக் தொடர்பில் அமைச்சு மட்டத்தில் விரிவான விசாரணை நடத்தப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இந்த நிலை குறித்து அரச சேவைகள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், மேலதிக ஒழுக்காற்று நடவடிக்கை குறித்து தீர்மானிப்பதற்கு முன்னர் அவர்களிடமிருந்து உரிய பதிலுக்காக காத்திருப்பதாகவும் வைத்தியர் அசேல குணவர்தன மேலும் தெரிவித்தார்.