பாடசாலைகளின் நீர் கட்டணம் 900 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக குருநாகல் மாவட்ட உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இவ்வாறு பணம் அறவிடுவது அசாதாரணமான ஓர் விடயம் எனவும், இந்த பணத்தை செலுத்த பெற்றோர் மிகுந்த சிரமங்களை எதிர்நோக்குவதாகவும் அவர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவிடம் கேள்வி எழுப்பிய போதே தயாசிறி ஜயசேகர மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாட்டில் 10,100 பாடசாலைகள் உள்ளன. பாடசாலை குடிநீர் கட்டணத்தில் நான்கில் ஒரு பங்கை அரசு செலுத்துகிறது. நான்கில் மூன்று பங்கை குழந்தைகளின் பெற்றோர் செலுத்த வேண்டும்.
இவ்வாறு நீர் கட்டண அதிகரிப்பின் மூலம் எனது பாடசாலையான நாரம்மல மயூரபாத வித்தியாலயத்திற்கு 1, 25000 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அதன்படி, நீங்கள் அந்த பாடசாலைக்கு 31, 250 ரூபாயை மாத்திரமே செலுத்துகிறீர்கள். மீதியை யார் கொடுப்பார்கள்? அமைச்சர் பணம் செலுத்துவதில்லை. அந்த சுமையை பெற்றோர் மீது சுமத்த வேண்டாம். மத ஸ்தலங்களிலும் இதே நிலைதான். இந்த நிறுவனங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்” என தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த,
“பாடசாலைகளில் அத்தியாவசியமாக பயன்படுத்தப்படும் நீரை இலவசமாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதைவிட அதிகமாக பயன்படுத்தப்படும் நீருக்கே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. குறைந்தபட்ச நீரின் அளவு அதிகமாக இருந்தால், அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படும். அதற்கான முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அப்போது அந்த சுமை யாருக்கும் போகாது.” என தெரிவித்தார்.