தெற்காசிய நாடான இந்தியாவால் நிலவின் தென்துருவத்துக்கு அனுப்பப்பட்ட ‘சந்திராயன் -3’ இன் “விக்ரம்“ திட்டம் வெற்றிபெற்றமைக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன், இதனை இலங்கை வரவேற்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை விசேட உரையொன்றை முன்வைத்தார்
இந்தியாவால் அனுப்பப்பட்ட ‘சந்திராயன் -3’ இன் “விக்ரம்“ விண்கலம் நிலவின் தென் துருவத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் 2 வாரங்களுக்கு இந்த விண்கலம் இங்கு ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளது.
இது இந்தியாவின் இரண்டாவது வெற்றிகரமான விண்கலமாகும். அத்துடன், நிலவின் தென் துருவத்தில் விண்கலத்தை நிலைநிறுத்தியுள்ள முதல் நாடாகவும் இந்தியா பதிவாகியுள்ளது.
தெற்காசிய நாடாகவுள்ள இந்தியா, இத்தகையதொரு திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்துள்ளமைக்காக வாழ்த்துவதுடன், இதனை வரவேற்கிறோம். இந்திய அரசாங்கத்துக்கும் இந்திய மக்களுக்கும் இலங்கை சார்பில் எமது வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்தியாவால் நிலவின் தென்துருவத்துக்கு அனுப்பப்பட்ட ‘சந்திராயன் -3’ இன் ‘விக்ரம் ‘ லேண்டர் மற்றும் ‘பிரக்யான்’ ரோவர் ஆகியவை நேற்று நிலைநிறுத்தப்பட்டதுடன், அவை தற்போது நிலவில் நடைபயணம் செய்து வருவதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தெரிவித்துள்ளது.