’இனி என் பெயர் ராக்கி சாவந்த் இல்லை, ஃபாத்திமா எனக் கூப்பிடுங்கள்’ என உம்ரா பயணம் சென்று வந்த பின்பு நடிகை ராக்கி சாவந்த், தன்னுடைய பெயரை மாற்றிக் கொண்டு அதிரடியாக அறிவித்துள்ளார்.
பிரபல பொலிவூட் நடிகை ராக்கி சாவந்த் சமீபத்தில் ஹஜ் உம்ரா புனிதப் பயணத்தை முடித்து திரும்பிய பிறகு தனது பெயரை ஃபாத்திமா என மாற்றியுள்ளது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
நடிப்பு மட்டுமல்லாது பல சர்ச்சைகளிலும் சிக்கி, அடிக்கடி விமர்சனத்திற்குள்ளாகும் நடிகை ராக்கி, கான் துரானி என்பவரைக் காதலித்து திருமணம் செய்திருந்தார்.
திருமணமான சில மாதங்களிலேயே கணவருக்கு எதிராக புகார் அளித்த ராக்கி சாவந்த், அவர் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும், வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதாகவும் குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். இதனால் கான் துரானியை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து விவாகரத்து பெற விரும்புவதாக ராக்கி சாவந்த் கூறி வந்தார்.
இந்நிலையில், சமீபத்தில் சவூதி அரேபியாவுக்கு உம்ரா சென்ற ராக்கி சாவந்த் மும்பை திரும்பினார். ஹிஜாபுடன் மும்பை விமான நிலையத்துக்கு வந்த நடிகை ராக்கி சாவந்தை பார்த்த ரசிகர்கள், அவர் கழுத்தில் மலர் மாலையை போட முயன்றனர். அதை, மறுத்த ராக்கி சாவந்த், மாலையை கையில் வாங்கி கொண்டார்.
பின்னர், அவரை ராக்கி சாவந்த் என பத்திரிகையாளர்கள் அழைத்த போது அதைத் தடுத்து, ’என்னை ஃபாத்திமா என அழையுங்கள்’ என்றார்.
அவரின் இந்த பதில் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ’கணவரால் இஸ்லாம் மதத்துக்கு மாறிய நீங்கள், சட்டத்துக்காக பெயரை ஃபாத்திமா என மாற்றி கொண்டீர்களா?’ என பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு ராக்கி சாவந்த், ’கடவுள் என்னை அழைத்ததால் ஹஜ் உம்ரா சென்றேன். கடவுளின் விருப்பம் இதுதான். சட்டத்துக்காக எனது பெயரை மாற்ற வேண்டும் என்ற தேவை இல்லை’ என்றார்.
இதனைக் கேட்ட ரசிகர்கள் அவர் முழுவதும் இஸ்லாம் மதத்துக்கு மாறி விட்டார் எனக் கூறி வருகின்றனர். முன்னதாக உம்ராவில் இருந்து அழுது கொண்டே ராக்கி பகிர்ந்த வீடியோவையும் ரசிகர்கள் இணையத்தில் ட்ரோல் செய்து வருகின்றனர்.