ஒக்டோபர் 04 ஆம் திகதி நாடு முழுவதிலுமுள்ள முஸ்லிம் பாடசாலைகளிலும், முஸ்லிம் மாணவர்கள் கல்வி பயிலும் பாடசாலைகளிலும் முஸ்லிம் சமய விழுமியங்களை மேம்படுத்தும் வகையில் மீலாதுன் நபி விழா கொண்டாடப்படுதல் வேண்டுமென கல்வி அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்நிகழ்வுகளில் தாய் நாட்டிற்கும், நாட்டு மக்களுக்கும் சுபீட்சமும், சௌபாக்கியமும் கிடைக்கப் பெற பிரார்த்திக்குமாறும் கல்வி அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.
இது தொடர்பான கல்வி அமைச்சின் ஓகஸ்ட் 29 ஆம் திகதிய ED/09/55/03/01/01 இலக்க சுற்றறிக்கை சகல முஸ்லிம் பாடசாலை அதிபர்களுக்கும் முஸ்லிம் மாணவர்கள் கல்வி பயிலும் ஏனைய பாடசாலை அதிபர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதிபர்கள் இவ்விடயம் பற்றி சகல ஆசிரியர்களுக்கும், கல்வி சாரா உத்தியோகத்தர்களுக்கும் முன்கூட்டியே தெரியப்படுத்துவதுடன் பாடசாலையில் மீலாதுன் நபி விழா நடாத்தப்படும் விதம் தொடர்பாக தீர்மானித்து, பாடசாலையின் சகல மாணவ, மாணவிகளுக்கும் அதுபற்றி அறிவித்தல் வேணடும் எனவும், இவ்விழாவில் மதகுருமார், அதிபர்கள், ஆசிரியர்கள், கல்வி சாரா உத்தியோகத்தர்கள், மாணவர்கள் மற்றும் பாடசாலை சமூகம் சார்ந்தவர்களை பங்குபற்றச் செய்து, கல்வி நடவடிக்கைகளுக்கு பாதகமில்லாதவாறு நடாத்தப்படுதல் வேண்டும் எனவும் அவ்வாரத்தில் பாடசாலையும், பாடசாலைச் சூழலும் சுத்தம் செய்யப்பட்டு இஸ்லாமிய கலாச்சார அம்சங்களுடன் நேர்த்தியான முறையில் அலங்கரிக்கப்படுதல் வேண்டுமெனவும் கல்வி அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.
சகல பாடசாலைகளும் ஒக்.04 ஆம் திகதி ஒரே தினத்தில் தேசிய ரீதியில் மீலாதுன் நபி விழாவினை வெற்றிகரமாக நடாத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கல்வி அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது.